பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-7

புற உலகு புகும் இரகசியம்
பிரபஞ்சத்தின் இயக்கங்களை ஆள்வதற்காக, அதிதேவதைகள் எனும் சக்திவாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நெருப்பு, காற்று, மின்சாரம், இரவு, பகல் முதலியவற்றிற்கு தேவதைகள் ஆளுநராக இருப்பதை உணர்ந்த பக்குவப்பட்ட யோகிகள், இத்தேவதைகளின் நல்லுறவோடு, தமது உடலை தகுந்த நேரத்தில் நீத்து, பௌதிக உலகின் உயர் கிரகங்களுக்கோ அல்லது ஆன்மிக புற உலகுக்கோ செல்ல வழி செய்து கொள்கின்றனர்.

"யாகம், தானம், தவம் முதலான நற்காரியங்கள் புரிவதால், நல்ல சந்தர்ப்பத்தில் உடலை விடும் யோகிகளல்லாத பிறரும், உயர்கிரகங்களை அடைகின்றனர். எனினும் இவர்கள் பூமிக்குத் திரும்பிவர வேண்டியவரேயாவர். 'தூமா' எனும் சந்திரனற்ற மாதப்பகுதியில், சூரியன் தனது தென் திசைக்கதியிலியங்கும் நேரத்தில் இவர்கள் உடல் நீக்குகின்றனர்."

தனியாக ஒருவர் தான் விரும்பும் ஒரு கிரகத்தை அடைதல் சாத்தியமே எனினும், இது மனத்தின் மனோதத்துவ மாற்றத்தால் மட்டுமே முடியும். ஜட உடலின் உட்கரு மனமே. மனத்தின் எண்ணங்களின் மாற்றத்தை அதாரமாகக் கொண்டு ஜட உடலின் பரிணாம முன்னேற்றம் நிகழ்கிறது. ஒரு புழுவின் உடலுருவிலிருந்து வண்ணத்துப்பூச்சியின் உடல் தோன்றுதலும், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக மாறுவதும் மனோதத்துவ மாற்றங்களையே பெரும்பாலும் பொறுத்திருக்கின்றன.

மரணத்தின்போது, பகவான் இறைவனின் இடத்தில் மனத்தை நிறுத்தி, உடலை விடுபவர்கள் உடனேயே ஆன்மிக உலகின் உன்னத நிலையை அடைவர் என்று கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஜடத்திலிருந்து மனத்தை பகவானின் திவ்விய ரூபத்தை நோக்கி திருப்பப்பழக்கப்படுத்திக் கொள்வதற்கான பக்தி சேவையின் நியமங்களை அனுசரிப்பவர் எவராயினும் ஆன்மிகப் புறவெளியில் ஆண்டவனின் அகக்ரகத்தை அடைவது சுலபம்.

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-6

ஜட உலகம் அழிவுக்குட்பட்ட இயற்கையை உடையது. பௌதிக ஆன்மிக உலகங்கள் மோதலால் பெரு நாசம் உண்டாகும் என்ற பௌதிக விஞ்ஞானிகளின் கூற்றில் சிறிது உண்மை இருக்கின்றது. பௌதிக உலகானது இயற்கை நிலைகளால் உண்டாக்கப்படுவதாக இருக்கின்றது. இந்த நிலைகள் ஸத்வம் (நற்குணம்), ரஜஸ் (தீவிரம்), தபஸ் (அறியாமை) என்பனவாம். இந்த ஜட உலகம் தீவிர குணத்தால் படைக்கப்பட்டு, நற்குணத்தால் காக்கப்பட்டு, அறியாமையால் அழிக்கப்படுகின்றது. இக்குணங்கள் சர்வமயமாயிருப்பதனால், ஒவ்வொரு கணமும், நிமிடமும், மணிநேரமும், ஆக்கலும் காத்தலும், அழித்தலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

இவ்வுலகின் மிக உயர் கிரகமான பிரம்ம லோகமும் இவ்வியற்கை நிலைக்குட்பட்டதேயாம்.

நற்குணத்தின் ஆதிக்கத்தால் 43,00,000 x 1000 x 2 x 30 x 12 x 100 கதிரவ வருடங்களுக்கு இங்கு வாழ்நாள் நீடிக்கிறது. இந்த நீண்ட வாழ்நாளைக் கொண்டபோதும் இவ்வுலகம் அழிவுக்குட்பட்டதேயாம். பௌதிக உலகில், பூமியில் வாழும் நாட்களுடன் ஒப்பிடுகையில் வினோதமாகப் பெருகிய காலத்தைக் கொண்ட வாழ்நாள் இருப்பினும் பிரம்ம லோகத்து வாழ்வு, ஆன்மிக உலக வாழ்வின் ஒரு துளிபோன்றதேயாம்.

பௌதிக உலகின் அழிவு இருவிதமாய் உண்டாகிறது. 43,00,000 x 1000 சூரிய வருடங்களுக்கொரு முறை, பிரம்மலோகத்தின் ஒவ்வொரு தினத்தின் முடிவுலும், பகுதிப்பிரளயம் ஏற்படுகின்றது. இப்பிரளயத்தின் போது உயர்க்கிரகங்களான பிரம்மலோகம் போன்றவை அழிவுறுவதில்லை. ஆனால் 43,00,000 x 1000 x 2 x 30 x 12 x 100 கதிரவ வருடங்களுக்கொரு முறை முழுப்பிரளயம் ஏற்படும் போது, பிரபஞ்சம் முழுவதுமே, பௌதிக மூலாதார தத்துவங்கள் உருவாகும் ஆன்மிகப் பெருவுடலோடு ஒன்றிவிடுகின்றது. எனினும் ஜடவெளியிலிருந்து வெகு தொலைவிலுள்ள ஆன்மிக உலகு அழிவுறுவதில்லை. அது பௌதிக உலகங்களை தன் வயப்படுத்திக்கொள்கின்றது. இவ்வுண்மையை ஆன்மிக த்த்துவத்தின் நிர்ணயங்களை உணர்ந்தறிந்த முக்தர்களின் இழுக்கற்ற ஆதாரத்திலிருந்தே அறியமுடியும்.

இவ்விதமாக வேத ஞானமானது ஜடவுலகின் முதல் உயிர்வாழியான பிரம்மாவின் இதயத்தில் அறிவுறுத்தப்பட்டது. நாரதருக்கு இந்த ஞானம் பிரம்மாவால் வழங்கப்பட்டது. இதுபோன்றே பகவத் கீதையின் ஞானம் விவஸ்வான் எனும் சூரியதேவதைக்கு ஸ்ரீகிருஷ்ணனால் வழங்கப்பட்டது. இந்த சீடப்பரம்பரையின் தொடர்பு விட்டுபோனபோது மீண்டும் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யப்பட்டது.

ஆன்மிக உலகின் விவரங்களை அறியுமுன்பு ஒருவன் தனது இதயத்தையும், பழக்கவழக்கங்களையும் முழுமையாகத் தூய்மைப்படுத்திக் கொள்ளல் அவசியம். பக்குவப்பட்ட யோகியும், புதிய பயிற்சியாளனும் பழகும்படியாக 'பக்தியோகம்' உன்னதமான தெளிவான விஞ்ஞன வழியாக விளங்குகின்றது.

பரமபுருஷனான பகவான், வேறெந்த பலனுமின்றி ஒருவனால் சேவை செய்யப்படுகையில் பௌதிக உலகின் விஷயங்கள் தாமாகவே ஒளியூட்டப்படுவதோடு உலகாயதமான விதத்தில் செயலாற்றாமலே பக்தனின் உள்ளம் வளம்பெறுகின்றது. இதுவே பகவத் கீதையின் ரகசியமாகும். இது அனைத்து உயிர்வர்க்கங்களுக்கும் பொருந்தும்.

புற உலகு புகும் வழி
ஆன்மிக உலகங்களிற் புகுவது, ஜட உபகரணங்கள் மூலமாக அல்லாமல் வேறுபட்டதாக இருக்கின்றது. இவ்வுலகில் வாழும்போதே ஆன்மிக சேவைகளிலீடுபட்டு உயிர்கள் புற உலகு புகும் பேறு பெறலாம்.
ஆனால் உலகாயதவாதிகள் சோதனை செய்தறியும் அறிவில் முழு நம்பிக்கை கொண்டவரும் பழுத்த பௌதிக வாதிகளுமானவர் ஆன்மிக புற உலகு புக மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் விண்கலங்கள் பௌதிக உலகின் வேறு கிரகங்களையே அணுக இயலாதவைகளாக இருக்கையில், பௌதிக அண்டங்களுக்கப்பால் வெகு தொலைவில் உள்ள சேதனப் புறவெளியை அடைய இயலாததாகும். பௌதிக உடலைக்கட்டுப்படுத்த இயன்ற யோகிகளுக்கு கூட இந்தப்பிரதேசம் புகமுடியாததாகும்.

ஆன்மிக சேதனத்தை கட்டுப்படுத்தி இயக்கி, ஒரு குறிப்பிட்ட சமயத்தில் தன்னிச்சையாக உடலைவிட்டுப் போகும் சித்தர்கள், பௌதிக ஆன்மிக உலகுகளை இணைக்கும் ஒரு தனிப்பாதை வழியாக ஆன்மிக உடலை அடைய முடியும். இப்படி முயலுபவர்கள் கூட கீதையில் குறிப்பிடப்பட்ட முறையை பின்பற்றுகின்றனர்.

"உன்னதத்தை உணர்ந்து கொண்டவர்கள், உத்தராயணம் எனும் சூரியன் தனது வடதிசைக் கதியிற் செல்லும் காலத்தில் நெருப்பு, ஒளி இவற்றின் அதிதேவதைகளால் வாயுமண்டலம் ஆதிக்கப்படுத்தப்பட்ட சுபநேரத்தில் உடலை நீத்து, ஆன்மிக உலகை அடைய இயலும்."

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5

உயிருள்ள உடலின் இந்த விதமான விவரிப்பு, சக்தி இருவிதங்களில் உள்ளது என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிச்சயப்படுத்துகிறது. இவ்விரு சக்திகளிலொன்றான சேதனம் ஜட உடலைவிட்டுப் பிரிக்கப்படும்போது, பின்னது எல்லாவிதங்களிலும் உபயோகமற்றுப் போகின்றது. எனவே சேதன அங்கமென்பது ஜடசக்தியைக் காட்டிலும் உயர்ந்தது என்பது தெளிவாகின்றது.

"எனவே, ஜடசக்தியின் நஷ்டத்தை எண்ணி, எவரும் கலங்குதலாகாது. வெப்பம், குளிர், இன்பம், துன்பம் என்ற வகைவகையான புலன் நுகர்ச்சிகளெல்லாம், வந்துபோகக்கூடிய, ஜடசக்தியின் இடை விளைவுகளேயாம். நிலையற்ற இவ்வித ஜட இடைவிளைவுகளின் தோற்றமும் மறைவுமே, 'ஜீவன்' என்றழைக்கப்படும் உயிர்ச்சக்தியினாலேயே பௌதிக உடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நிச்சயப்படுத்துகிறது.

இன்பமும், துன்பமும் கீழ்த்தரச்சக்தியின் இடை விளைவுகளால் ஏற்படும் பௌதிக நிலைகளே என்பதை அறிந்துகொண்ட மதிநலம்பெற்றவன், நிலையான, உண்மையான ஞானம் முழுமைபெற்ற, ஆனந்தமயமான வாழ்வைக் கொண்ட ஆத்மிக உலகை அடையத் தகுதி பெறுகிறான்.

சேதன உலகு இங்கு விவரிக்கப்படுவதோடு மட்டுமன்றி அங்கு "காலமாற்றம்" (ஏற்ற இறக்கம்) இல்லை என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அங்கு எல்லாமே நிலையானதும், முழுமையான ஞானத்தையும் ஆனந்தத்தையும் பூரணமாகப் பெற்றவையாம். இதை 'உலகு' என நாம் குறிப்பிடும்போதே, இது உருவமும் அங்கங்களும் கொண்டது என்பது நிச்சயமாகின்றது. நமது அனுபவத்திற்கப்பாற்பட்ட உபகரணங்களால் இவ்வுலகு அமைக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

"அழிவுக்குட்பட்டதனால் ஸ்தூல உடலானது மாறக்கூடியதும், நிலையற்றதுமாம். ஜட உலகும் இத்தன்மையதே. ஆனால் ஜடமற்றதான சேதன சக்தி அழிவற்றதாகையால் நிலைபெற்றதாகும். ஜட, சேதன அங்கங்களின் தன்மையை நிலையற்றது, நிலையானது என இரண்டு விதமாக விஞ்ஞானிகள் பிரித்தறிகின்றனர்."

இருந்தும், ஆன்மிகத் தத்துவங்களைப்பற்றி மனங்கொண்டு ஊகிப்பவை சிலர் வேறு சிலவிதமாகக் கூறுவதுண்டு. தீவிர உலகாயதவாதிகளான ஒரு பிரிவினர் ஆன்மிகத் தத்துவத்தின் இருப்பை மறுக்கவோ, அல்லது மரணத்தின்போது பௌதிக மூலங்களின் அமைப்பு சிதைவதை மட்டும் ஒத்துக்கொள்ளவோ செய்கின்றனர். மற்றோரு பிரிவினர் 24 விதமான பௌதிக மூலங்களுக்கு நேர் எதிராக ஆன்மிகத் தத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இப்பிரிவினர் 'சாங்கியர்' என அழைக்கப்படுபவர். ஜடத்தத்துவங்களைப் பிரித்து நுண்மையாக ஆராய்கின்றனர். தமது ஆராய்ச்சியுன் இறுதியில், இயக்கமற்ற ஒரு உன்னத தத்துவம் இருப்பதாக மட்டுமே ஒத்துக்கொள்கின்றனர்.

ஆனால் பௌதிக உலகின் நிலையிலிருந்து, ஆன்மிக உலகை மதிப்பிட ஒருவராலும் இயலாது. ஆனால் இறைவனை அறிந்து கொள்ள உயிர்ச்சக்திகளை ஆராய்வதன் மூலம் ஒர் அனுமானத்திற்கு வர இயலும்.

"அர்ச்சுனா! நானே உன்னத்தின் உயர்ந்த தத்துவம். எனக்கு மேற்பட்டு சிறந்தது ஒன்றுமில்லை. நூலில் கட்டிய மணிகள் போன்று, எல்லாமே என்னைச் சார்ந்து இருக்கின்றன"- என கீதையில் கண்ணபகவான் குறிப்பிடுகிறார்.

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1