உனக்குள் இருக்கிறது உன்னதம்-10



     உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், குழந்தை, சொந்த-பந்தம், பெற்றோர், பக்கத்து வீட்டுக்காரர் என்று தொடங்கி, அவரது நண்பர், அவரது பகைவர் அனைவருமே அவருடைய உறவு வட்டத்திற்குள் வருபவர்கள்தான். இத்தனை உறவிகள் எதற்காக என்ற கேள்வி எழலாம். ஒரு மனிதருக்கிருக்கும் விதவிதமான தேவைகளை நிறைவு செய்வதற்காகவே வித விதமான உறவுகள் உருவாகின்றன. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சர்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

      உங்கள் வாழ்வில் விதவிதமான செயல் பாடுகளுக்கேற்ப விதவிதமான உறவுகள் அமைகின்றன. இதில், ஒவ்வொரு நாளும் உங்கள் செயல்களின் தன்மை மாறிக்கொண்டே வருகிறபோது, அந்தச் செயல்களுக்கேற்ப ஏதாவது ஒரு குறிப்பிட்ட உறவிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் பங்குதாரரிடம் தொலைபேசியில் பேசுகிறீர்கள். அடுத்த நிமிடமே உங்கள் குழந்தையிடம் ஏதோ கேட்கிறீர்கள். அதற்கடுத்த நிமிடமே உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குப் பதில் சொல்கிறீர்கள். ஒவ்வோர் உறவையும் ஒவ்வொருவிதமாகக் கையாள வேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தையைக் கையாள்கிற விதத்தில் உங்கள் கணவரைக் கையாள முடியாது. எனவே, இத்தனை உறவுகளையும் ஒருசேர கையாள்வது என்பது பத்து பந்துகளை ஒரே நேரத்தில் வீசிப்பிடிப்பதைப் போன்றது.

     உங்கள் கைகளில் ஒரேயொரு பந்து இருக்குமென்றாஅல் எளிதாக இருக்கும். ஒரே நேரத்தில் பத்து பந்துகளை வீசிப்பிடிக்க வேண்டும். ஒன்றைக் கூட நழுவ விடக்கூடாது என்றால் அது எவ்வளவு சிரமமானது! ஒரே நேரத்தில் பல உறவுகளைக் கையாளுவது என்பது இப்படித்தான். ஒரு மனிதர் ஒரே நேரத்தில் பத்து பந்துகளை வீசிப் பிடிக்கும்போது அவரால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியாது. நீங்கள் உறவுகளைக் கையாளுகிற சூழலும் இப்படித்தான் இருக்கிறது.

உங்களுடைய சில தேவைகளை நிறைவு செய்வதற்காக உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், அந்த உறவுகளின் தேவைகளை ஈடுசெய்ய வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு இருக்கிறது. இன்னொரு விதமாகவும் வாழலாம். அது எவ்விதமான உறவுகளும் இல்லாமல் வாழ்வது. தனக்குள்ளேயே முழு நிறைவைக் கண்டு வெளியே வேறு உறவுகளைத் தேட வேண்டிய தேவையில்லாமல் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால், இப்போதைய சூழலில் பிறருடன் நீங்கள் கொண்டிருக்கும் உறவுகள்தான் உங்கள் வாழ்க்கையின் தன்மையையே தீர்மானிக்கின்றன. எனவே, வீட்டிலும் சரி; அலுவலகத்திலும் சரி; வெளியிலும் சரி – மிகவும் மேன்மையான உறவுகளி மேற்கொள்வது எப்படி என்று பார்க்க வேண்டும்.

      உறவுகளின் ஆதாரசுருதியே தேவைகள்தான் என்பதை முதலில் பார்த்தோம். விதம்விதமான உறவுகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாய் இருக்க முயல்கிறீர்கள். நட்பை உருவாக்கிக் கொள்வது, திருமணம் செய்து கொள்வது, குழந்தை பெற்றுக்கொள்வது, தொழில் தொடங்குவது – இவையெல்லாமே மகிழ்ச்சியாய் இருப்பதற்கான முயற்சிகள் தான். இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், மனிதர்களைக் கசக்கிப் பிழிந்து மகிழ்ச்சியின் சாறெடுக்க முயல்கிறீர்கள். இதைச் செய்கிற போதுதான் உறவுகள் உங்களுக்குத் தொடர்ந்து தொந்தரவுகளையே தருகின்றன.

     பெரும்பாலான் மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உறவுகளிலேயே மிகவும் நெருக்கமானது ஆண்-பெண் உறவுகள் தான்.

அவர்கள் சேர்ந்திருக்கும் நேரங்களில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். பிரித்து வைத்தீர்கள் என்று சொன்னால் 24 மணி நேரத்திற்கு மேல் அவர்களால் பிரிந்திருக்க உடியாது. மறுபடியும் சேர்த்து வைத்தால் பத்து நிமிடங்களுக்குள் சண்டையைத் தொடங்கி விடுவார்கள். அவர்களால், சேர்ந்தும் இருக்க முடியாது; பிரிந்தும் இருக்க உடியாது. பிரச்சினையே இதுதான். இது அவர்களுக்குள் இருக்கும் ஒருவித தேவையின் காரணமாக ஏற்படுகிற மோதல்.

     தங்களுக்குள் மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ அவர்கள் உணரவில்லை. ஒருவர் இன்னொருவரிடமிருந்து மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ பிழிந்தெடுக்கப் பார்க்கிறார்கள். ஆனால், இதுவொரு போராட்டமாகத்தான் இருக்கும். நெருக்கமான உறவுகளில் இருக்கும் இத்தகைய இரண்டு பேர் ஒருவரையொருவர் கொலை செய்துவிடப் போவதில்லை. ஆனால் ஒருவரையொருவர் வெவ்வேறு விதங்களில் சித்திரவதை செய்து கொள்வார்கள். இது ஒரு ஒப்பந்தம். ஏனெனில், இன்னொருவரைக் கொலை செய்துவிட்டால் அவருக்கு வேறு போக்கிடம் இல்லை.

     எனவே, மேன்மையானா உறவுகள் மலர வேண்டுமென்றால், ஒரு மனிதர் உறவு கொள்வதற்காக இன்னொருவரைத் தேடுவதர்க்கு முன் தனக்குள் ஆழமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் ஆனந்தத்திற்கு நீங்களே மூலமாக இருக்கும் போது, உங்கள் உறவுகள் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழியாக இருக்கும் போது, உறவுகளைக் கசக்கிப் பிழிய வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. எல்லோரோடும் மிக அற்புதமான உறவுகளை உங்களால் மேற்கொள்ள முடியும்.

No comments: