10. குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்

     இவரை கருமசௌமியர் என்பவரின் சீடர் என்றும் அகத்தியரின் சீடர் என்றும் கூறுவர். இவர் முற்பிறவியில் இராமதேவர், மறுபிறப்பில் தேரையர் ஆவார்.

     அகத்தியர் தமக்கு ஒரு நல்ல சீடன் வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்தார். அது சமயம் ஔவையார் ஒரு சிறுவனுடன் அகத்தியரை தேடி வந்தார். ஔவையுடன் வந்த சிறுவனைப்பற்றி விசாரித்தார் அகத்தியர்.

      அதற்கு ஔவையார் இவன் பாவம் ஊமைப் பிள்ளை, பிராமணன் உங்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று அழைத்து வந்தேன் என்றார். உடனே அச்சிறுவனான இராமதேவரை அகத்தியர் சீடனாக ஏற்றுக்கொண்டார்.

     பாண்டிய மன்னன் சிறந்த சிவ பக்தன். ஆனால் கூன் முதுகு உடையவர். இதை ஜாடைமாடையாக மக்கள் விமரிசிப்பதைக் கண்டு மனம் வருந்தி மன்னன் அகத்தியரிடம் ஆலோசனை கேட்டான். அகத்தியரும் தம் மூலிகை வைத்தியத்தால் அவனது சரி செய்வதாகக் கூறினார். சீடனை அழைத்து அபூர்வமான சில மூலிகைகளை கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.

     சீடன் மூலிகைகளைக் கொண்டுவந்தவுடன், அவைகளை நன்றாக இடித்து சாறு எடுத்து ஓர் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்தார். அப்பொழுது அரண்மனையிலிருந்து அழைப்பு வரவே, அகத்தியர் ஊமை சீடனை “அடுப்பைப் பார்த்துக்கொள்” என்று சாடை காட்டிவிட்டு சென்றார். மூலிகைச் சாறு நன்றாக கொதித்துக் கொண்டிருந்தது. சீடன் மிகவும் கவனமாக இருந்தார்.

     கொதிக்கும் மூலிகைச் சாற்றின் ஆவி பட்டு ஆசிரமத்தின் மேல் கட்டப்பட்டிருந்த ஓர் வளைந்த மூங்கில் மெல்ல மெல்ல நிமிர்ந்தது. அது கண்ட சீடன் இராமதேவன் மூலிகைச் சாறு பதமாகிவிட்டது என்று யூகித்து கொதிக்கும் சாற்றை இறக்கி வைத்தார்.

     அகத்தியர் திரும்பி வந்தார். மூலிகைச் சாறு இறக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு என்ன நடந்தது என்று வினவினார். சீடன் வளைந்த மூங்கில் நிமிர்ந்ததை சுட்டிக் காட்டினார்.

     குறிப்பறிந்து செயல்பட்ட இராமதேவனை அகத்தியர் மனமார பாராட்டினார். அந்த மூலிகை தைலத்தால் மன்னனின் கூன் முதுகு சரியானது.

     காசிவர்மன் என்ற மன்னனுக்கு தலைவலி வந்தது. வேதனை பொருக்கமுடியாத வேந்தன் அகத்தியரின் கால்களில் விழுந்து தன்னை குணப்படுத்துமாறு கதறினான். அகத்தியர் மன்னனின் உடலை பரிசோதித்தார். மன்னனின் தலைவலிக்கான காரணம் புரிந்தது. “மன்னா! நீ தூங்கும்போது சிறிய தேரைக்குஞ்சு ஒன்று உன் மூக்கினுள் புகுந்துவிட்டது. அந்த தேரை மூளைக்குப் போய் தங்கிவிட்டது. அந்த தேரைதான் உன் தலைவலிக்குக் காரணம்” என்றார். மன்னன் திடுக்கிட்டான். அகத்தியர் மன்னா கவலைப்படாதே தேரையை வெளியே எடுத்து உன் தலைவலியை தீர்க்கிறேன் என்று தைரியம் கூறினார்.

     சிகிச்சை தொடங்கப்பட்டது. மன்னன் மயக்க நிலையில் ஆழ்த்தப்பட்டான். ஐந்து நிமிடத்தில் மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் தேரை உட்கார்ந்திருந்தது. இதைக் கண்ட அகத்தியர் தேரையை எப்படி எடுப்பது என்று யோசித்தார். குருநாதரின் திகைப்பைக் கண்ட இராமதேவன் வாய் அகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து தேரையின் கண்களில் படுமாறு காண்பித்தான்.

     தேரை தண்ணீரைப் பார்த்த சந்தோஷத்தில் பாத்திரத்தினுள் குதித்தது.

  உடனே அகத்தியர் சந்தானகரணி என்னும் மூலிகையினால் மன்னனின் கபாலத்தை மூடினார். சீடரைக் கட்டித்தழுவி பாராட்டினார். மன்னனின் தலைவலி தீர்ந்ததால் அவர் இருவரையும் பாராட்டினார்.

     இராமதேவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தேரையர் என்று அழைக்கப்பட்டார்.

  அவருடைய ஊமைத்தன்மையைப் போக்கி தமக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் தேரையருக்கு அகத்தியர் போதித்தார். அவரின் உறுதுணையால் தேரையர் ‘தொல்காப்பியம்’ என்ற இலக்கண நூலை இயற்றி ‘தொல்காப்பியர்’ என்ற பெயரும் பெற்றார்.

     ஒருமுறை சித்தர் ஒருவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. அவர் தனது நோயைத் தீர்த்துக்கொள்ள அகத்தியரின் உதவியை நாடினார். அகத்தியரும் அவருக்கு மருந்தை தந்து பத்தியத்தையும் கூறி அனுப்பினார்.

  ஆனால் நோய் குணமாகவில்லை. அகத்தியர் தகவல் அறிந்து உடனே தேரையரை அழைத்து அவர் நோயைக் குணப்படுத்துமாறு அனுப்பினார். சித்தரைப் பரிசோதித்த தேரையர், ஒரு கொடுக்காய்க் குச்சியை எடுத்து நோயாளியின் வாயை திறந்து குச்சியை அதனுள் நுழைத்து அதன் ஓட்டை வழியாக மருந்தை செலுத்தினார். வயிற்று வலி உடனே தீர்ந்தது. தேரையர் அகத்தியரிடம் சென்று செய்தியைக் கூறினார்.

     தாம் கொடுத்த மருந்து பலம் இழந்ததற்கு காரணம் நோயாளியின் பல்லில் உள்ள விஷத்தன்மைதான் என்பதை உணர்ந்து தேரையர் குச்சி மூலம் மருந்தை செலுத்தியுள்ளார் என்பதை அகத்தியர் உணர்ந்துகொண்டார்.

     தேரையரின் திறமையை வெளிப்படுத்த நினைத்த அகத்தியர் அவரை அருகில் அழைத்து தேரையா! நீ உனக்கு விருப்பமான இடத்திற்கு போய் நல்லவர்களுக்கு உன்னால் முடிந்த அளவு உதவி செய் என்றார்.

 தேரையரும் குருவின் கட்டளைக்கு அடிபணிந்து அணனமயம் என்ற காட்டுப்பகுதியில் தவம் செய்ய துவங்கினார். அங்கு தவம் செய்யும் முனி, ரிஷிகளின் பிணிகளைப் போக்கினார்.

உலக நன்மையின் பொருட்டு...
பதார்த்த குண சிந்தாமணி,
நீர்க்குறிநூல்,
நோய்க்குறி நூல்,
தைல வர்க்க சுருக்கம்,
வைத்திய மகா வெண்பா,
மணி வெண்பா,
மருந்துப் பாதம்

முதலான நூல்களை இயற்றினார்.

அகத்தியருக்கு நாளுக்கு நாள் கண்பார்வை மங்கியது. சீடர்கள் மிகவும் கவலைப்பட்டார்கள். அப்போது அணனமயம் காட்டில் இருக்கும் சித்தர் பற்றி நினைவு வரவே அவரை அழைத்து வந்து அகத்தியர் கண்ணுக்கு வைத்தியம் செய்ய எண்ணி அகத்தியரிடம் உத்தரவு வேண்டினர். அகத்தியர் கொஞ்சம் யோசித்து “நீங்கள் போகும் போது புளியமரத்தின் நிழலிலேயே உறங்க வேண்டும்” என்று கட்டளையிட்டு அனுப்பினார்.

     வெகுநாட்கள் நடந்த சீடர்கள் தேரையரின் இருப்பிடத்தினை அடைந்தனர். தன் குரு நாதருக்கு கண் பார்வையைத் தெளிவாக்க வேண்டுமாறு கோரினர். இதைக் கூறி முடித்த சீடர்கள் இரத்தவாந்தி எடுத்தனர். அந்த நிலைக்கான காரணத்தை அறிந்திருந்த தேரையர், சீடர்களிடம் திரும்பிச் செல்லும் போது வேப்பமரத்தின் நிழலிலேயே உறங்கிச் செல்லுமாறும் தாம் இரண்டு நாட்களில் வைத்தியத்திற்கு வருவதாகவும் கூறியனுப்பினார்.

      திரும்ப வந்த சீடர்கள் உடல் நலனுடன் இருப்பதைக் கண்ட அகத்தியர் “இது தேரையரின் வைத்தியம் தான்” என்பதை புரிந்து கொண்டார்.

    தேரையர் அகத்தியரின் ஆசிரமம் அடைந்து அகத்தியரின் கண்களைப் பரிசோதனை செய்து வைத்தியம் பார்த்து குணமாக்கினார். பார்வை தெளிவடைந்த அகத்தியர், சடாமுடியும் தாடியுமாக இருந்த தேரையரைப் பார்த்து தேரையா உன்னை எனக்கு அடையாளம் தெரியாமல் போய்விடுமா! உன்னை இங்கு வரவழைக்கவே இந்த தந்திரம் செய்தேன் என்றார். தேரையர் மனம் நெகிழ்ந்து அகத்தியரின் கால்களில் விழுந்து வணங்கினார். நாட்கள் ஓடின.

      ஒருநாள் அகத்தியர் தேரையரை அழைத்து “தேரையா, எனக்கு கண்வெடிச்சான் மூலிகை வேண்டும்” என்றார். கண்வெடிச்சான் மூலிகையைப் பறித்தால் அதிலிருந்து கிளம்பும் புகையால் பறித்தவன் கண்கள் பறிபோய்விடும், யாரும் தப்ப முடியாது. ஆனால் தேரையர் தயங்காமல் இதோ கொண்டுவருகிறேன் என்று காட்டுக்குள் சென்றார். மூலிகையைக் கண்டார். ஆனால் அதனைப் பறிக்காமல் அங்கேயே அமர்ந்து கண்களை மூடி தேவியை தியானம் செய்தார். “கவலைப்படாதே தேரையா! மூலிகையை நான் பறித்துத் தருகிறேன்” என்ற குரல் கேட்டு விழித்த தேரையரின் முன் கண்வெடிச்சான் மூலிகை இருந்தது. தேவிக்கு நன்றி கூறிவிட்டு, அகத்தியரிடம் மூலிகையைக் கொடுத்தார். அகத்தியர் மிகவும் மகிழ்ந்து, “நான் வைத்த எல்லா சோதனைகளிலும் நீ தேறிவிட்டாய். நீ அறிந்த மூலிகைகளைப் பற்றி ஒரு நூல் எழுது” என்றார். குருவின் கட்டளைப்படி அவரின் ஆசிகளுடன் ‘தேரையர் குலைபாடம்’ என்ற நூலை இயற்றினார். நெடுங்காலம் மருத்துவ சேவை செய்த தேரையர் பொதிகை சார்ந்த தோரண மலையில் (மலையாள நாடு) தவம் செய்து அங்கேயே ஜீவ சமாதியடைந்தார்.

ஸ்ரீ தேரையர் தியான செய்யுள்

மாய மயக்கம் நீக்கி
காய கல்பம் தேடி
மூலிகை கொணர்ந்து
முதுகுகூன் நிமிர்த்திய
அகத்தியர் சீடரே உன் பாதம் சரணம்.

தேரையர் பூசை முறைகள்

      அகப்புறத்தூய்மையுடன் அழகிய சிறு பலகையை செம்மண்ணினால் மெழுகிக் கோலமிட்டு மஞ்சள் குங்குமம் இடவேண்டும். அவ்வாசனத்தின் மேல் தேரையரின் படம் வைத்து வெள்ளை அல்லது ரோஜா வண்ண வஸ்திரம் அணிவித்து அல்லது படைத்து அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கினை நான்கு அல்லது ஐந்து முக தீபமேற்றி வழிபட வேண்டும்.

     முதலில் தியானச் செய்யுளை கூறி மூலிகை இலைகளினால் அர்ச்சனை செய்து பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூற வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. குரு மெச்சிய சீடரே போற்றி!
2. தேரையை அகற்றிய தேரையரே போற்றி!
3. சிவனை பூசிப்பவரே போற்றி!
4. சங்கடங்களை போக்குபவரே போற்றி!
5. சஞ்சலங்களை தீர்ப்பவரே போற்றி!
6. சாந்த சொரூபரே போற்றி!
7. நோய்தீர்க்கும் மருந்தே போற்றி!
8. ஞானம் அளிக்கும் ஞானியே போற்றி!
9. சித்த சுத்தியுடையவரே போற்றி!
10. சகல பாபங்களையும் போக்குபவரே போற்றி!
11. குறிப்பறிந்து செய்யும் குணசீலரே போற்றி!
12. வெள்ளை வஸ்திரம் தரிப்பவரே போற்றி!
13. துக்கத்தைப் போக்குபவரே போற்றி!
14. கண் ஒளி தந்த கருணையே போற்றி!
15. குறை தீர்க்கும் நிறையே போற்றி!
16. பாண்டியன் கூன் நிமிர்த்திய தேரையரே போற்றி! போற்றி!

     அர்ச்சனை செய்தபின் மூலமந்திரமாக “ஓம் லபம் ருணம் நஸீம் ஸ்ரீ தேரைய சித்தரே போற்றி! போற்றி!” என்று 108 முறை கூறி வழிபட வேண்டும். நிவேதனமாக மிளகு பொங்கல், பால் பாயாசம், தேங்காய் சாதம் போன்றவற்றை படைக்க வேண்டும். இவரை பூசிக்க ஞாயிற்றுக் கிழமை சிறந்தது.

தேரையர் பூசா பலன்கள்
1. ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷம் விலகும்.
2. குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
3. பெண்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி, இடுப்புவலி குணமாகும்.
4. பெண்களாலேயே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை தீரும்.
5. தீராத தலைவலி, இடுப்புவலி நீங்கி நலம் உண்டாகும்.
6. உடலில் ஏற்படும் ஒவ்வாமை நோய் சரியாகும்.
7. வீண் பழி, அவமரியாதை அகன்று புகழ் உண்டாகும்.
8. வாக்கு பலிதமும், ராசியோகமும் உண்டாகும்.
9. எந்த பிரச்சனையானாலும் சரியான முடிவெடுக்கும் ஆற்றல் உண்டாகும்.

தேரையர் வரலாறு முற்றிற்று.

9. காவேரி தந்த அகத்திய சித்தர்

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும்,
மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.
முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.
மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.
சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார்.
தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.
அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

நிவேதனம்
பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

அகத்திய முனிவரின் பூசா பலன்கள்
1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2. கல்வித்தடை நீங்கும்.
3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4. முன்வினை பாவங்கள் அகலும்.
5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும்.
9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.


அகத்தியர் சித்தர் வரலாறு முற்றிற்று.

8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்

சுந்தரானந்தர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அகமுடையார் குலத்தில் பிறந்தார் என போகர் தெரிவிக்கிறார். யோகத்தில் நீண்ட காலம் அமர்ந்திருந்து சித்துக்கள் பல புரியும் ஆற்றல் பெற்றுள்ளார். அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார். இவரின் குரு சட்டை முனி என்று சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.
அபிஷேக பாண்டியன் மதுரையை ஆண்ட காலத்தில் சச்சிதானந்த வடிவாகிய சுந்தரானந்த சித்தர் மதுரையம்பதி கடை வீதி, சித்திரக்கூடம், நாற்சந்தி வீதி, உப்பரிகை போன்ற இடங்களில் திரிந்து பல சித்துக்களை விளையாடினார். இந்திரஜாலமாக மறைந்தும், பெண்ணை ஆணாக்கியும், ஆணை பெண்ணாக்கியும், ஊனமுற்றவர்களை சுகப்படுத்தியும், இரும்பு, செம்புகளை தங்கமாக்கியும் பற்பல ஜாலங்கள் புரிந்திருக்கிறார். இதைக் கண்டு அதிசயித்த மக்கள் மன்னனுக்கு செய்தியை தெரிவித்தனர். மன்னன் சித்திரை அரண்மனைக்கு அழைத்து வர ஆள் அனுப்பினார். ஆனால் சித்தரோ அரசனை தன்னை வந்து பார்க்கும் படியாகச் சொல்லியனுப்பினார்.
சித்தரை சந்திக்க அரசர் ஆவலோடு வந்தார். சித்தரிடம் ஊர், பேர் முதலியவைகளைக் கேட்க தாம் பல சித்து விளையாட்டுகளை செய்து காட்டும் சித்தரெனக் கூறினார். அப்போது கையில் கரும்புடன் ஒருவன் வந்தான் அதைக்கண்ட அரசர் அக்கரும்பை வாங்கி சித்தரிடம் கொடுத்து “இக்கரும்பை இங்கு கற்சிலையாக நிற்கும் கல்யானையை உண்ணும்படிச் செய்தால் நீங்கள் சித்தர் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றார்.
சித்தரும் சம்மதித்து கரும்பை கையில் வாங்கி கல் யானையிடம் நீட்டி கண்ணசைத்தார். அனைவரும், அரசரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கல்யானை துதிக்கையை நீட்டி கரும்பை வாங்கி உண்டு ஏப்பம் விட்டு பிளிரியது. அரசனும் அனைவரும் அதிசயித்து அன்பும், பக்தியும் பெருக்கெடுக்க சித்தர் திருவடிகளில் வணங்கினர்.
நிமிர்ந்த போது யானை மறுபடியும் கல்யானையாக காட்சியளித்தது. சித்தரும் கோவிலுக்குள் சென்று மறைந்தார். இவர் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் சித்த்தராக சமாதியில் வீற்றிருக்கின்றார்.

சுந்தரானந்தர் இயற்றிய நூல்கள்:
1. சுந்தரானந்தர் காவியம்
2. சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
3. சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
4. சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
5. சுந்தரானந்தர் கேசரி
6. சுந்தரானந்தர் சித்த ஆனம்
7. சுந்தரானந்தர் தீட்சா விதி
8. சுந்தரானந்தர் பூசா விதி
9. சுந்தரானந்தர் அதிசய காரணம்
10. சுந்தரானந்தர் சிவயோக ஞானம்
11. சுந்தரானந்தர் மூப்பு
12. சுந்தரானந்தர் தண்டகம்
ஆகிய நூல்களை எழுதினார். மேலும் பயிர் தொழில் சம்பந்தப்பட்ட சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் கூறியுள்ளார்.

தியானச்செய்யுள்
சித்து விளையாட்டில் சிறந்தவரே
சிவனுடன் கலந்தவரே
ஆயசித்தி அனைத்தும் அறிந்தவரே
அபயம் அளிக்கும் அருளாளரே
மதுரையம்பதி வாழ் மகத்துவமே
உன் பாதம் சரணம்.

சுந்தரானந்தர் பூசை முறைகள்
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் ஐந்து முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. ஒளி பொருந்தியவரே போற்றி!
2. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
3. லோக ஷேம சித்தரே போற்றி!
4. யோக மூர்த்தியே போற்றி!
5. அவதார புருஷரே போற்றி!
6. அபயமளிப்பவரே போற்றி!
7. சிவ யோகியே போற்றி!
8. இந்திரனுக்கு அருளியவரே போற்றி!
9. ஜடாமுடிப் பிரியரே போற்றி!
10. சகல சித்திகளையும் உடையவரே போற்றி!
11. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
12. சுகங்களைத் தருபவரே போற்றி!
13. தாய் போல் காப்பவரே போற்றி!
14. தண்டனைகளை நீக்குபவரே போற்றி!
15. தைரியத்தை கொடுப்பவரே போற்றி!
16. சித்த மருத்துவத் தெய்வமே ஸ்ரீ சுந்தரானந்த சித்தரே போற்றி! போற்றி!
எனக் கூறி நிவேதனமாகக் கடலை, வெண்பொங்கல் படைத்து இவற்றுடம் மஞ்சள் வஸ்திரம் அல்லது காவி வஸ்திரம் படைத்து வியாழன் அன்று வழிபட வேண்டும். நிறைவாக “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சுவாமியே போற்றி! போற்றி!” என 108 முறை கூறி வழிபட வேண்டும்.

சுந்தரானந்த சித்தரின் பூசை பலன்கள்:
1. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
2. கொடுக்கல், வாங்கல் பிரச்சனை ஏற்படாது.
3. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
4. புத்திர பாக்கியம் உண்டாகும்.
5. குரு பிரீதி அடைவர்.
6. புகை பிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.
7. சித்த பிரமை அகலும்.
8. ஞாபக சக்தி அதிகரிக்கும்.
9. வறுமை அகன்று வளமான வாழ்வு அமையும்.
சுந்தரானந்த சித்தர் வரலாறு முற்றிற்று.

7. திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்

இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார்.

ஒருநாள் கோவில் வாசலில் பிச்சைக்காக நின்று கொண்டிருந்த போது வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டார். அவரிடம் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருப்பதாக உணர்ந்த சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார்.

போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.

இவர் ஞானத்தை மனித குலம் முழுமைக்கும் உபதேசிக்க முயன்றார். தம் சாதனைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் நேரிடையாக எழுத ஆரம்பித்தார். புரியாத பரிபாஷையில் எழுதாமல் வெளிப்படையாக எழுதுவதைத் தடை செய்வதற்காக சித்தர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர். சட்டைமுனியின் நூல்களை குகையில் வைத்து பாதுகாக்கும்படி சிவபெருமான் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.

இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென அவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கக்ப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் அற்புத தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா! என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் ஜீவ சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது. இத்தகவல் மரு.ச.உத்தமராசன் எழுதிய “தோற்ற்க் கிராம ஆராய்ச்சியும், சித்த மருத்துவ வரலாறும் என்ற நூலில் காணப்படுகிறது.

சட்டைமுனி இயற்றிய நூல்கள்:

சட்டைமுனி நிகண்டு – 1200

சட்டைமுனி வாதகாவியம் – 1000

சட்டைமுனி சரக்குவைப்பு – 500

சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500

சட்டைமுனி வாகடம் – 200

சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200

சட்டைமுனி கற்பம் – 100

சட்டைமுனி உண்மை விளக்கம் – 51

தியானச் செய்யுள்

சித்த வேட்கை கொண்டு

சிறந்து விளங்கிய சீலரே

அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற

அற்புத மூர்த்தியே

எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய்

ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!

சட்டைமுனி சுவாமி பூசை முறைகள்

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.

பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை ஜாதிப்பூ அல்லது விருட்சிப்பூ அல்லது வில்வம் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. திருவரங்கனின் அருள்பெற்றவரே போற்றி!

2. ஸ்ரீ சக்கரத்தை தரிசனம் செய்தவரே போற்றி!

3. தேகத்தினைக் காப்பாற்றுவாய் போற்றி!

4. ஜலத்தில் வாசம் செய்பவரே போற்றி!

5. அக்னி பகவானை பூசிப்பவரே போற்றி!

6. வருண பகவானை வணங்குபவரே போற்றி!

7. நவக்கிரகங்களின் ஆசிகளை அளிப்பவரே போற்றி!

8. ஸ்ரீ ஸ்கந்தனை வணங்குபவரே போற்றி!

9. கவலைகளை அகற்றுபவரே போற்றி!

10. நோய்களை அழிப்பவரே போற்றி!

11. வில்வ அர்ச்சனை பிரியரே போற்றி!

12. காம குரோதத்தை அழிப்பவரே போற்றி!

13. சமுத்திரத்தை பூசிப்பவரே போற்றி!

14. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!

15. ராமநாமப் பிரியரே போற்றி!

16. எல்லா ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சட்டைமுனி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீம் சட்டைமுனி ஸ்வாமியே போற்றி! என்று 108 முறை ஜபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பானகம் அல்லது தேன், கதளி (செவ்வாழை) வைத்து படைத்து, உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ சட்டைமுனி சுவாமியின் பூசை பலன்கள்:

இவர் நவக்கிரகத்தில் கேது பகவானை பிரதிபலிப்பவர். இவரை வழிபட்டால்,

1. சித்த பிரமை கோளாறு, மனோவியாதி, பைத்தியம் பிடித்தது போல் உள்ள நிலை மாறும்.

2. மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு அறிவு அபிவிருத்தி ஏற்படும்.

3. சரியாகப் படித்தாலும் பரிட்சை எழுதும் நேரத்தில் மறந்து போகும் நிலை மாறும்.

4. மூளையில் ரத்தம் உறைதல், மன உலைச்சல், வீண் பிரமை, தனக்குத்தானே பேசிக் கொள்ளும் தன்மை அகன்று தெளிவு ஏற்படும்.

5. கேது பகவானால் ஜாதகத்தில் ஏற்படும் திருமணத்தடை மற்றும் களத்திர தோஷம் நீங்கும். திருமணம் நல்ல முறையில் நடக்கும்.

6. போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகுதல், புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் அகலும்.

7. ஆன்மிகப்பாதையில் உள்ள முன்னேற்றத் தடை அகலும்.

8. இவருக்கு பல வர்ணங்கள் கலந்த வஸ்திரத்தை அணிவிக்கலாம்.

பூசை செய்து வழிபட வேண்டிய சிறந்த நாள் வெள்ளிக்கிழமை.

சட்டைமுனி சித்தர் வரலாறு முற்றிற்று.

6. அகப்பேய் சித்தர்

திருவள்ளுவர் பரம்பரையில் தோன்றிய இந்த சித்தரின் இயற்பெயர் நாயனார். இந்த மகான் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்தார். தொழிலில் நல்ல வருமானம் கிடைத்தது. எனினும் சித்தர் பெருமானின் மனம் பொருளாசையை விடுத்து அருளாசையை தேடி அலைந்தது.
மக்களை மாயையிலிருந்து மீட்பதற்காக, முதலில் தனக்கு ஒரு குருவைத் தேடி காடுகளில் எல்லாம் திரிந்தார். அப்பொழுது ஜோதி மரம் ஒன்று இவர் கண்களுக்கு தெரிந்தது. உடனே அந்த மரப்பொந்துக்குள் புகுந்து கொண்டு வியாசர் பெருமானை தன் மனக்கோவிலில் குருவாக தியானித்து தவம் இருக்கத் துவங்கினார். இவரின் கடுந்தவத்தினை மெச்சிய வியாசர் நேரில் தோன்றினார். மிகப்பெரும் தவப்பேற்றை அகப்பேய் சித்தருக்கு கொடுத்து அரிய பல மந்திர உபதேசங்களையும் செய்தார். அகப்பேய் சித்தரை வாழ்த்திவிட்டு வியாசர் மறைந்தார். மனிதர்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழும் தீய செயல்களையும், தீய எண்ணங்களையும் நீக்குவதற்காக இவர் “அகப்பேய் சித்தர் பாடல்கள் 90” என்ற நூலை இயற்றினார்.
“அங்கும் இங்கும் ஓடும் மன அலையை மட்டுப்படுத்தினால், நஞ்சுண்ணவும் வேண்டாம் நாதியற்றுத் திரியவும் வேண்டாம். அந்த இறை நாதன் உன்முன் தோன்றுவான்”, என்பது இவரின் வாக்கு.

இவர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை:
அகப்பேய் சித்தர் பாடல் – 90
அகப்பேய் பூரண ஞானம்.

இவர் சித்தியடைந்த திருத்தலம் : - திருவையாறு.


தியானச்செய்யுள்

இலை உடையுடன் கலை உருவாய்
காட்சி தரும் காரியசித்தி சுவாமியே
மாறாத சித்தியை மரப்பொந்தினில்
பெற்ற மங்காச் செல்வரே
அசைகின்ற புத்தியை
இசைக்கின்ற சித்தியால்
இனிது காப்பாய் அகப்பேய் சித்தரே.

அகப்பேய் சித்தர் பூசை முறைகள்:
தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் அகப்பேய் சித்தர் சுவானியின் படத்தை வைத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
முதலில் இந்த சித்தருக்கான தியானச் செய்யுளை மனமுருகக் கூற வேண்டும். பின்பு பின்வருன் பதினாறு போற்றிகளை வில்வம் அல்லது பச்சிலைகள் அல்லது துளசி அல்லது கதிர்பச்சை அல்லது விபூதி பச்சை கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்
1. வனத்தில் சஞ்சாரம் செய்பவரே போற்றி!
2. பேய் பிசாசுகளை விரட்டுபவரே போற்றி!
3. பித்ருப்ரியரே போற்றி!
4. உயிர்களைக் காப்பாற்றுபவரே போற்றி!
5. சாந்தமாக இருப்பவரே போற்றி!
6. சந்தான தோஷத்தைப் போக்குபவரே போற்றி!
7. சங்கீதப்பிரியரே போற்றி!
8. சூரியன் சந்திரன் போன்று பிரகாசம் உடையவரே போற்றி!
9. ரத்தினங்களை அணிபவரே போற்றி!
10. ஹஸ்த தரிசனம் செய்பவரே போற்றி!
11. கஜபூசை செய்பவரே போற்றி!
12. முனிவர்களுக்கு காட்சியளிப்பவரே போற்றி!
13. உலகரட்சகரே போற்றி!
14. சிறுவர்களால் வணங்கப்படுபவரே போற்றி!
15. முக்தி அளிப்பவரே போற்றி!
16. ஸ்ரீ சக்ர ஸ்வாமியாகிய அகப்பேய் சித்தர் சுவாமியே போற்றி!
இவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் அகப்பேய் சித்தரே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.
பின்பு நிவேதனமாக இளநீர் (வடிகட்டி வைக்க வேண்டும்) அல்லது பழம் பால் வைத்து படைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்ட வேண்டும்.
நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ அகப்பேய் சித்தரின் பூசை பலன்கள்:
இவர் நவக்கிரகத்தில் குரு பகவானைப் பிரதிபலிப்பவர். வியாழக்கிழமை இவரை பூசிக்க சிறந்த நாள். இவரை வழிபட்டால்,
1. ஜாதகத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷ்ங்கள் அகலும்.
2. பணப்பிரச்சினைகள், புத்திர பாக்கியம் கோளாறு, அரசாங்கத்தால் பிரச்சினை போன்றவை அகலும்.
3. வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம், சமாளிக்க முடியாத நிலை இவையெல்லாம் அகன்று லட்சுமி கடாட்சம் பெருகும்.
4. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
5. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
6. கொடுக்கல், வாங்கல், பிரச்சினை வழக்குகள் அகலும்.
7. வறுமை அகன்று வாழ்க்கை வளம் பெறும்.
8. இவருக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.


அகப்பேய் சித்தர் வரலாறு முற்றிற்று.

5. கொங்கணர் சித்தர்

     எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர் பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன.
கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர் கொங்கணருக்கு உபதேசித்துள்ளார்.
     கொங்கணர் குருநாதரைச்சுற்றி வந்து வணங்கிவிட்டு, உடனே கிளம்பி சென்று உயர்ந்த மலை ஒன்றின் மேல் ஏறி அதன் உச்சியில் அமர்ந்து அம்பிகையை நினைத்து தவம் செய்து கொண்டிருக்கையில் மனதிற்குள் ஏதோ தோன்றவே, தவத்தைக் கைவிட்டு சக்தி வடிவங்கள் சொன்ன அற்புதமான ஒரு யாகத்தை ஆரம்பித்தார். அப்பொழுது கௌதமர் அவர் முன் வந்து “கொங்கணரே, தவத்தைச் செய்து அதன்மூலம் தான் சிவத்தை அடைய வேண்டும். எனவே யாகத்தை விடு, தவம் செய்” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். எனவே யாகமும் நிறுத்தப்பட்டது.
     தில்லையை அடைந்த கொங்கணர் மறுபடியும் யாகத்தை செய்ய ஆரம்பித்தார். யாகம் முடிந்ததன் பயனாக கொங்கணருக்கு ஏராளமான சித்திகள் கிடைத்தன. அதனால் நிறைய குளிகைகளை உண்டாக்கினார்.
     ஒருநாள் கொங்கணர் திருமழிசை ஆழ்வாரிடம் சென்று செம்பை பொன்னாக்கும் குளிகை ஒன்றினைப் பெருமையுடன் கொடுத்து, “இது காணி கோடியை போதிக்கும்” என்றார். ஆழ்வாரோ தம் உடம்பின் அழுக்கையே திரட்டி கொடுத்து “இரசவாதக் குளிகை இது காணி கோடியை ஆக்கும்” என்று கொடுத்தார். ஆழ்வாரின் பெருமையினை கண்ட கொங்கணர், அவரோடு நட்புறவு கொண்டார். திருமழிசையாழ்வார் சந்திப்பிற்கு பிறகு தவத்தில் ஈடுபட்டார்.
கடுந்தவம் பலன் தந்தது. இரும்பையும் செம்பையும் தங்கமாக்கும் இரசவாதத்தில் கருத்தைச் செலுத்தாமல் தங்கத்தை வீசி எறிந்தார். தன் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பிச்சை எடுத்த உணவை மட்டுமே உண்டார்.
     ஒருநாள் இவர் தவம் செய்து கொண்டிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு கொக்கு இவர் மேல் எச்சம் இட்டது. கொங்கணர் அந்தக் கொக்கை உற்றுப் பார்த்தார். உடனே கொக்கு எரிந்து சாம்பலாகியது.
      தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட கொங்கணர், திருவள்ளுவர் வீட்டிலே பிச்சையின் பொருட்டு வந்தார். அப்பொழுது வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவு படைத்துக் கொண்டிருந்தார். அதன் பின் காலதாமதமாக பிச்சையிட வந்ததால் சினம் கொண்ட கொங்கணர், மாதே! என்னை இவ்வளவு காலம் காக்க வைத்தாயன்றோ? என்று கூறி விழித்து நோக்கினார். ஆனால் அவ்வம்மையார் உடனே எரிந்து சாம்பலாகிவிடவில்லை. கொங்கணர் திகைப்புடன் பார்த்தார். உடனே வாசுகி அம்மையார் நகைத்து “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!” என்று கூறினார். தான் காட்டில் செய்த செயல் இவ்வம்மையாருக்கு எவ்வாறு தெரிந்தது என்று வியந்து அவரின் கற்பின் வலிமையை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
      திருவள்ளுவர் வீட்டிலிருந்து கிளம்பி வரும் வழியில் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களைத் தெய்வமாக வழிபடும் தர்மவியாதன் என்பவனைச் சந்தித்தார்.
      கொங்கணரைப் பார்த்ததும் தர்மவியாதன் ஓடிவந்து வணங்கினான். “சுவாமி! வாசுகியம்மையார் நலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். கொங்கணருக்கு மேலும் வியப்பு. “அப்பா! நான் அங்கிருந்து தான் வருகிறேன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.
      தர்மவியதன், “சுவாமி! வாசுகி அம்மையார் கணவரிடம் பக்தி கொண்ட பதிவிரதை, அடியேன் பெற்றோர்கள்தான் தெய்வம் என்பதை உணர்ந்து அதன்படி செயல்படுபவன். இதனால் தான் எங்களிடம் ஏதோ சக்தி இருக்கவேண்டும்” என்று கூறி அவரிடம் விடைபெற்றான். கொங்கணர் உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனிடம் தெய்வ சக்தியை உண்டாக்குகிறது என்பதை உணர்ந்த கொங்கணருக்கு மனம் கனிந்தது.
     கொங்கணர் போகரைச் சந்திப்பதற்கு முன் ப சித்தர்களைச் சந்தித்து சித்துக்கள் பல பயின்றார்.
      தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார். அப்போது அவர், “திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்” என்று வழியனுப்பினார்.
   பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை எதிர்கொண்டழைத்து உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்கு பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்து சமய தீட்சை நிர்வாண தீட்சை முதலியனவற்றையும் உபதேசித்தார்.
அதன்பிறகு கொங்கணர் திருவேங்கட மலை சென்று தவம் செய்தார். அப்போது வலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரைச் சந்தித்து அவர் சீடராக ஆனான். பலப் பல ஞான அனுபவ விவரங்களைக் கொங்கணரிடம் இருந்து அறிந்தான்.
அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க கொங்கணர் பல பாடல்களை எளிமையான முறையில் இயற்றி அருளினார். இறுதியில் கொங்கணர் திருவேங்கடத்தில் சித்தியடைந்தார்.

கொங்கணவர் இயற்றிய நூல்கள்:
கொங்கணவர் வாதகாவியம் – 3000
கொங்கணவர் முக்காண்டங்கள் – 1500
கொங்கணவர் தனிக்குணம் – 200
கொங்கணவர் வைத்தியம் – 200
கொங்கணவர் வாதசூத்திரம் – 200
கொங்கணவர் தண்டகம் – 120
கொங்கணவர் ஞான சைதன்யம் – 109
கொங்கணவர் சரக்கு வைப்பு – 111
கொங்கணவர் கற்ப சூத்திரம் – 100
கொங்கணவர் வாலைக்கும்பி – 100
கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் – 80
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் – 49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம் – 45
கொங்கணவர் மூப்பு சூத்திரம் – 40
கொங்கணவர் உற்பத்தி ஞானம் – 21
கொங்கணவர் சுத்த ஞானம் – 16 என்பவையகும்.

கொங்கணவர் சித்தர் தியானச் செய்யுள்
கொக்கை எரித்த கொங்கணரே
அம்பிகை உபாசகரே
கௌதமரின் தரிசனம் கண்டவரே
இரசவாதமறிந்த திவ்யரே
உங்கள் திருப்பாதம் சரணம்.

கொங்கண சித்தருக்கான பூசை முறைகள்:
அகப்புறத் தூய்மையுடன் பூஜையைத் துவக்க வேண்டும். அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகிக் கோலமிட்டு, எட்டு பக்கங்களிலும் சந்தனமும், குங்குமமும் இடவேண்டும். அப்பலகை மீது கொங்கணரின் உருவப்படத்தை வைக்க வேண்டும். சுத்தமாக விளக்கிய குத்து விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் மலரிட்டு அலங்கரித்து முக்கூட்டு எண்ணெய் தீபமேற்றி பூசையைத் துவங்க வேண்டும்.
முதலில் தியானச் செய்யுளை சொல்லி பக்தியுடன் வணங்கவேண்டும். பின்பு வில்வம், சாமந்தி, அரளி ஆகியவற்றால் 16 போற்றிகளைச் சொல்லிக் கொண்டே அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கம்பீரமான தோற்றம் உள்ளவரே போற்றி!
2. அம்பிகைப் பிரியரே போற்றி!
3. இரசவாத சித்தரே போற்றி!
4. அர்ச்சனையில் மகிழ்பவரே போற்றி!
5. சிறந்த தவசக்தி பெற்றவரே போற்றி!
6. செல்வங்களைத் தருபவரே போற்றி!
7. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
8. நோய்களை அழிப்பவரே போற்றி!
9. வறுமையை போக்குபவரே போற்றி!
10. ஞானம் அளிப்பவரே போற்றி!
11. தீய கனவுகளில் இருந்து காப்பவரே போற்றி!
12. மாயையை அகற்றுபவரே போற்றி!
13. கருணாமூர்த்தியே போற்றி!
14. காவி வஸ்திரம் தரித்தவரே போற்றி!
15. கொங்கு தேசத்தவரே போற்றி!
16. குலம் விளங்கச் செய்பவரே போற்றி!
இவ்வாறு அர்ச்சித்தபிறகு “ஓம் ஸ்ரீம் கொங்கணமுனி சித்தர் பெருமானே போற்றி!” என்று 108 முறை ஜெபித்து பிரார்த்தனையை கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

ஸ்ரீ கொங்கணசித்தரின் பூஜா பலன்கள்:
முறைப்படி இவரை வழிபட்டால்
1. மனவளர்ச்சி அபிவிருத்தி ஏற்படும்.
2. கேது பகவானின் தோசம் நீங்கி களத்திர தோசம் இன்றி திருமணம் நல்ல முறையில் நடக்கும்.
3. தியானம் கைகூடும்.
4. சகவாச தோசம் நீங்கும்.
5. தீய பழக்கங்கள் விலகும்.
6. ஞாபக சக்தி உண்டாகும்.
7. உறவினர்களின் பலம் உண்டாகும்.
8. முன் கோபம் உள்ளவர்கள் சாந்த சொரூபிகளாவர்கள்.
இவருக்கு மஞ்சள், அல்லது சிவப்பு வர்ணங்கள் உடையை வைத்து அல்லது அணிவித்து பூஜை செய்யலாம். வழிபட சிறந்த நாள் வெள்ளிக்கிழமை. நிவேதனம்: தயிர்சாதம், கல்கண்டு, பழங்கள்.

கொங்கணவர் சித்தர் வரலாறு முற்றிற்று.

4. குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்

     இவர் போகரின் சீடராவார். புலிப்பாணி என்பது இவரது இயற்பெயரல்ல. இப்பெயர் மாற்றத்திற்கு காரணக் கதையுண்டு:

ஒரு நாள் போகர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்க தம் குருநாதர் கேட்டுவிட்டார் என்பதற்காக ஒரு புலியை வசியப்படுத்தி அதன் மீது ஏறிச் சென்று வெறும் கையாலேயே போதிய தண்ணீர் திரட்டிக் கொண்டு வந்தார். புலி மேல் சென்று பாணி (தண்ணீர்) கொண்டு வந்ததால் இவர் புலிப்பாணி என்றழைக்கப்பட்டார்.
பழனிமலை முருகன் சிலையை போகர் செய்வதற்கு உறுதுணையாய் இருந்தவர் புலிப்பாணி சித்தர். நவபாக்ஷாண மூலிகைகளை இவர் தமது புலியின் மீதேறி சென்று பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
போகர், சமாதிநிலைக்கு செல்லும் முன் பழநி தண்டாயுதபாணியின் பூசைகளை கவனித்துக் கொள்ளும்படி புலிப்பாணியை நியமித்தார். ஆனால் பிற்காலத்தில் அவரை போகர் சமாதிக்கு மட்டும் பூசை செய்ய அனுமதிக்கப்பட்டது.
போகர் பழநி சிலையை செய்து முடித்ததும் சீன தேசத்திற்கு சென்றார். அங்கு தமது தவ வலிமைகளை இழந்து விடவே, இந்த புலிப்பாணியார் அவரை தமது முதுகிலேயே சுமந்து வந்து பழநியில் வைத்து அவருக்கு சகல தவ வலிமைகளையும் அளித்தார் என்று கூறப்படுகிறது.
இவர் வைத்தியத்திலும் ஜாலங்கள் செய்வதிலும் போகரை மிஞ்சியவர் என்றும் சொல்லப்பபடுகிறது.

புலிப்பாணி சித்தர் தமிழில் இயற்றிய நூல்கள்:
புலிப்பாணி வைத்தியம் – 500
புலிப்பாணி சோதிடம் – 300
புலிப்பாணி ஜாலம் – 325
புலிப்பாணி வைத்திய சூத்திரம் – 200
புலிப்பாணி பூஜாவிதி – 50
புலிப்பாணி சண்முக பூசை – 30
புலிப்பாணி சிமிழ் வித்தை – 25
புலிப்பாணி சூத்திர ஞானம் – 12
புலிப்பாணி சூத்திரம் – 9 ஆகியவை.

தியானச் செய்யுள்:
மகா சித்தருக்கே மருத்துவம் சொன்ன மரவுரிச் சித்தரே
புலிவாகனம் கொண்ட மந்திர சித்தரே
மயில் வாகனனை வணங்கியவரே
எம் கலிப்பாவம் தீர்க்க
உங்கள் புலிப்பாதம் பற்றினோம்.

புலிப்பாணி சித்தர் பூசை முறைகள்:
தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்ச்சம் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல், புலிப்பாணி சித்தரின் படத்தினை வைத்து, அப்படத்தின் முன்பு, மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிட்டிருக்கும் தியானச் செய்யுளை கண் மூடி மனமுருகச் சொல்ல வேண்டும்.
பிறகு பின்வரும் 16 போற்றிகளை வில்வம் அல்லது சாமந்திப் பூ அல்லது அரளிப் பூ கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. கம்பீரமான தோற்றம் கொண்டவரே போற்றி!
2. தண்டபாணிப் பிரியரே போற்றி!
3. ஞானவரம் கொடுப்பவரே போற்றி!
4. வில்வ அர்ச்சனைப் பிரியரே போற்றி!
5. சித்த மருத்துவத்தின் தலைவரே போற்றி!
6. ராகு கிரகத்தை பூசிப்பவரே போற்றி!
7. யந்திரங்களை பிரதிஷ்டை செய்பவரே போற்றி!
8. உலகம் முழுவதும் வாசம் செய்பவரே போற்றி!
9. வனத்தில் வாசம் செய்பவரே போற்றி!
10. தெய்வயானையின் புதல்வரே போற்றி!
11. சூலாயுதம் உடையவரே போற்றி!
13. மிருகங்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
14. ஐஸ்வர்யங்களை அளிப்பவரே போற்றி!
15. எளிதில் மகிழ்ச்சி அடைபவரே போற்றி!
16. முருகப் பெருமானை வழிபட்ட புலிப்பாணி சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு 16 போற்றிகளையும் கூறி அர்ச்சித்த பிறகு, மூல மந்திரமான, “ ஓம் ஸ்ரீ புலிப்பாணி சித்தரே போற்றி” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.
பின்பு நிவேதனமாக, கமலா ஆரஞ்சைக் கொட்டைகள் நீக்கி உரித்து சுளையாய் வைக்க வேண்டும். அல்லது தக்காளியை விதைகள் எடுத்து விட்டு உப்பு தூவி வைக்க வேண்டும், தயிர் சாதத்தை உப்பில்லாமல் தாளிக்காமல் வைத்து படைக்க வேண்டும்.
பின் உங்கள் பிரார்த்தனைகளை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

புலிப்பாணி சித்தர் பூசை பலன்கள்:
இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோசம் ஏற்படும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை குலையும், விவசாயம் பாதிக்கும். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும்.
1. நிலத்தகராறு, சொத்துத் தகராறு, வழக்குகள் அகன்று வெற்றி கிடைக்கும்.
2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.
3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு தடைகள் நீங்கி வியாபாரம் பெருகும்.
4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட், செங்கல், சிமெண்ட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
5. செவ்வாய் தோசத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத்தடை நீங்கி, நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
6. இவருக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தி, ரோஜா, செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
7. பழனி தண்டபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள ரத்த சம்பந்தமான நோய்கள் அகலும்.
8. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
9. இவருக்கு பிடித்தமான செவ்வாய்க் கிழமையில், அரளிப்பூ மாலையிட்டு வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும்.

புலிப்பாணி சித்தர் வரலாறு முற்றிற்று.

3. வேறு கருவில் ஊராத கருவூரார்



சோழ நாட்டின் கருவூரில் பிறந்த கருவூர்ச்சித்தர், துள்ளி விளையாடும் பருவத்திலேயே ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார்.

கருவூராரின் பெற்றோர் ஊர் ஊராகச் சென்று, ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொண்டு வாழ்ந்தார்கள்.

ஒரு சமயம் போகர் திருவாவடுதுறைக்கு வந்தார். அதையறிந்த கருவூரார் அவரைச் சென்று வணங்கி தம்மை அவருடைய சீடராக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.

“கருவூராரே! உன் குல தெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு, அவள் உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறி வழிபாட்டு நெறிகளை கருவூராருக்கு உபதேசித்தார். போகர் உபதேசப்படி, கருவூரார், உள்ளம் உருகி அம்மனை வழிபட ஆரம்பித்தார். போகரின் வாக்கு பலித்தது. கருவூரார் சித்துக்கள் புரியும் ஞானவானாக உயர்ந்தார்.

கருவூரார், சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார். சித்தரின் இரசவாத வித்தையின் மூலம் உருவான அச்சிவலிங்கங்கள் ஒருமுறை பார்த்தால் செம்பு போலவும், மற்றொரு முறைப் பார்த்தால் பொன் போலவும் தோன்றும். கருவூரார் காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான லிங்கத்தை உருவாக்கி வைத்தார்.

போகர் தமிழ் நாட்டில் வசித்த காலத்தில் கருவூர் சித்தரும், திருமளிகைத் தேவரும் அவரின் பிரதான சீடர்களாக திகழ்ந்தனர்.

சோழ மன்னன் இரணிய வர்மன் தீர்த்த யாத்திரை புறப்பட்டு பல் புண்ணிய தலங்களை தரிசித்துவிடு தில்லையை அடைந்தார். சிற்றம்பல திருக்குளமான சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடும்போது தண்ணீருக்குள் ஓங்கார நாதம் ஒலித்தது. அரசருக்கு ஆச்சரியம் தாளவில்லை. தண்ணீரை விட்டு வெளியே எழுந்தவுடன் அந்நாதம் கேட்கவில்லை. மீண்டும் நீருக்குள் மூழ்கினார், ஓங்கார ஒலி தெளிவாகக் கேட்டது.

என்ன இது அதிசயம்? மறுபடியும் மூழ்கினார். கண்களைத் திறந்தார். அங்கு ஆடல் வல்லாரின் அற்புத நடனமும் கூடவே ஓங்கார ஒலி; அரசர் வியப்பில் ஆழ்ந்து போய் மீண்டும் மீண்டும் நீரினுள் மூழ்கி அந்நடனத்தையும் ஓங்கார ஓசையையும் கேட்டார்.

தாம் கண்ட காட்சியை ஓவியமாக வரைந்தார். தான் அனுபவித்த இந்த அற்புத இன்பத்தை உலகிலுள்ள அனைவரும் கண்டு அனுபவிக்க வழியை யோசித்தார். இறுதியில், தான் கண்ட வடிவத்தை மிகவும் தூய்மையான சொக்கத் தங்கத்தில் விக்ரகமாகச் செய்து பொன்னம்பலத்தில் எல்லோரும் தரிசனம் செய்யும்படி அமைக்க வேண்டுமென முடிவு செய்தார்.

“கலப்படமில்லாத சொக்கத்தங்கத்தில் உருவாக்க வேண்டும். செம்போ அல்லது வேறு எந்த உலோகமோ கடுகளவும் சேர்க்காமல் நாற்பத்தி எட்டு நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டுமென்று சிற்பிகளிடம் கூறினார்.

ஆனால் சிற்பிகள் என்ன முயன்றும் விக்கிரகத்தை முடிக்க முடியவில்லை. ஏதேனும் ஒரு வகையில் விக்கிரகத்தில் குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

மன்னர் கொடுத்த கெடுவில் நாற்பத்தேழு நாட்கள் பலனில்லாமல் போய்விட்டன.

தில்லையில் நடராசர் திருவுருவம் அமைக்கச் சிற்பிகள் வருத்தப்படுகிறார்கள் என்ற விவரத்தை அறிந்த போகர், தமது பிரதான சீடரான கருவூராரை அழைத்து, “கருவூரா! அந்த விக்கிரகம் செய்ய வேண்டிய வழிமுறைகளை நான் உனக்கு சொல்கிறேன். நீ போய் செய்து முடி” என்று சொல்லி கருவூராருக்கு வழிமுறைகளை அறிவித்து வழியனுப்பினார்.

நாற்பத்தெட்டாவது நாள் சிற்பிகளுக்கு மன்னர் கொடுத்த கடைசி நாள். சிற்பிகளெல்லோரும் சொல்லவியலாத துன்பத்தில் இருந்தனர்.

மரண பயத்தில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் கருவூரார் போய் நின்றார்.

“கவலைப்படாதீர்கள், மன்னரின் விருப்பப்படியே ஆடல் வல்லாரின் விக்கிரகத்தை நான் செய்து தருகிறேன்” என்று சிற்பிகளுக்கு ஆறுதல் கூறினார். சிற்பிகளோ “தேர்ந்த சிற்பிகளான எங்களாலேயே முடியாத போது உம்மால் எப்படி முடியும்?” என்றார்கள். “என்னால் முடியும். அதுவும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே”, என்றார் கருவூரார்.

விக்கிரகம் செய்வதற்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து தாழிட்டுக் கொண்டார்.

சிற்பிகள் நம்பமுடியாமல் வெளியே காத்திருந்தனர். ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கதவு திறந்து கருவூரார் வெளியே வந்து, “போய்ப் பாருங்கள், உங்கள் எண்ணப்படியே விக்கிரகம் முடிந்து விட்டது” என்று சொன்னார்.

நம்ப முடியாத ஆச்சரியத்தில் சிற்பிகள் உள்ளே நுழைந்தனர். அங்கு கருவூராரால் வடிவமைக்கப்பட்ட அம்பலக் கூத்தனின் அழகு திருமேனி உருவம் அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெளியே வந்த சிற்பிகள் கருவூராரை வணங்கினர்.

மறுநாள் சூரியோதயத்திற்கு முன்னரே இரணிய வர்மன் நீராடி திருநீற்றுக்கோலத்துடன் சிற்பிகள் இருந்த இடத்திற்கு வந்தார்.

அங்கு இருந்த நடராசர் சிலையின் அற்புத அழகில் மயங்கினார். சிலையின் ஒளியில் அவர் கண் கூசியது. “இறைவா! நீ இங்கு எழுந்தருளிய கோலம் தான் என்னே!” என்று வியந்தார். அங்கம் அங்கமாகத் தங்கச் சிலையை பார்த்து வியந்தார். தான் வரைந்த ஓவியத்தில் இல்லாத அருள்சக்தி விக்கிரகத்தில் இருப்பதை உணர முடிந்தது. அவர் முகத்தில் மகிழ்ச்சி அதிகரித்தது. சிற்பிகள் பக்கம் திரும்பிய மன்னர், ‘அபாரம்! அற்புதமாகச் செய்து விட்டீர்கள் உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப் போகிறேன்” என்றார். அப்போது மந்திரி, “மன்னா! சிலையிலிருக்கும் தங்கத்தை சோதித்த பின்னர் இவர்களுக்கு வெகுமதி கொடுக்கலாமே!” என்றார். அதைக் கேட்ட மன்னர், “சிற்பிகளே! விக்கிரகம் செய்யும் போது தங்கத்துகள்கள் சிந்தியிருக்குமே அந்தத் துகள்களைக் கொண்டு வாருங்கள்” என்றார்.

தங்கத்துகள்களை சிற்பிகள் கொண்டு வந்தார்கள். சோதனை செய்த மன்னரின் முகம் கடுமையாக மாறியது.

“சுத்தமான தங்கத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்லித்தானே உங்களை நியமித்தேன். சிலையில் சிறிது செம்பைக் கலந்து என்னிடம் நம்பிக்கை மோசடி செய்யலாமா?” என்று கடுமையாகக் கேட்டார்.

சிற்பிகள் பயந்து நடுங்கினர். “அரசே, நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தச் சிலையை எங்களால் செய்ய இயலவில்லை. அம்பலவர் அடியார் ஒருவர் வந்து இந்தச் சிலையை செய்தளித்தார்” என்றார்கள்.

மன்னர் திகைத்து விட்டார்.

“அடியார் செய்தாரா? அவரை இழுத்து வாருங்கள்” என்று கட்டளை பிறப்பித்தார் மன்னர்.

உடனே பணியாட்கள் கருவூரார் இருக்கும் இடம் சென்று அவரை அழைத்து வந்தார்கள். கருவூராரை மேலும் கீழுமாகப் பார்த்த மன்னர், “இவரைச் சிறையில் தள்ளுங்கள். யோசித்து, நாளை தண்டனை வழங்குகிறேன்!” என்று சொல்லி சிலையுடன் அரண்மனையை அடைந்தார்.

அங்கு விக்கிரகத்தை ஒரு பீடத்தில் வைத்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார், மன்னர் கண்களில் இருந்து கண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது.

திடீரென்று அவரெதிரே போகர் தோன்றினார். போகரின் பின்னால் தலைகளில் தங்க மூட்டைகளுடன் அவருடைய ஐந்து சீடர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு சீடரிடம் தராசு ஒன்றும் காணப்பட்டது. திடீரென்று அவர்களைப் பார்த்ததுமே மன்னருக்கு ஒன்றுமே தோன்றவில்லை. எழுந்து நின்று கைகளைக் குவித்தார்.

“மன்னா! நீ சிறைச்சாலையில் அடைத்து வைத்திருக்கிறாயே, அவன் என் மாணவன் இனி எந்தக் கருவிலும் ஊர்தல் செய்யாத தகுதி கொண்ட அவனைச் சிறையில் அடைத்து விட்டாய், இதுதானா உன் ஆட்சி முறை?” எனக்கேட்டார் போகர்.

அரசர், “சுத்தத் தங்கத்தில் செய்ய சொன்ன சிலையை செம்பு கலந்து செய்தது மாபெரும் தவறு அல்லவா? அதற்கேற்ற தண்டனைதான் அது” என்றார்.

“சுத்தத் தங்கத்தில் விக்கிரகம் செய்ய முடியாதே! அதனால் தான் செம்பைக் கொஞ்சம் கலக்கச் சொன்னேன். அப்படி செய்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு கேள். தூய்மையான சொக்க தங்கத்தில் வடிவம் ச்ய்து வைத்தால், அதிலிருந்து கிளம்பும் ஒளி, பார்ப்பவர்களின் கண்களை நாளாக நாளாக குருடாக்கி விடும். இந்த அறிவியல் உண்மை உனக்குத் தெரியாது.

அதனால்தான் என் மாணவன் கருவூரான் சிறிது செம்புடன் பலவிதமான மூலிகைச் சாறுகளையும் சேர்த்து விக்கிரகமாகச் செய்திருக்கிறான். சரி போனது போகட்டும் இந்தா நீ தந்த அதே சுத்த மாற்று தங்கம்,” என்றதோடு தராசில் சிலையை வைத்து இன்னோரு தட்டில் தங்கத்தைக் கொட்ட சீடர்களிடம் கூறினார்.

போகர், “அரசே! உன் தங்கத்தை நீ எடுத்துக் கொள்” என்று கூறிவிட்டு சிலையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பத் தொடங்கினார்.

மன்னர் திடுக்கிட்டு போகரின் காலில் வீழ்ந்து வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.

எழுந்திருங்கள் அரசே நடராசப் பெருமானை உமக்கே தருகிறேன். என் சீடனை எனக்குத் திருப்பிக் கொடு என்று கேட்டார் போகர்.

அதற்கு அரசர் “தாங்களே கருவூராரை சிறையிலிருந்து வெளியில் வரும்படி அழையுங்கள்” என்றார். அவர் அழைக்கவும் சிறையிலிருந்து வெளியே வந்தார் கருவூரார்.

அத்துடன் கோவில் அமையவேண்டிய முறை, எந்தெந்த வடிவங்களை எங்கெங்கு எப்படி வைக்க வேண்டும். மூலவரை எப்படி பிரதிட்டை செய்து பூசை செய்ய வேண்டும் என்று தெரிவித்துவிட்டு கருவூரார் அங்கிருந்து சென்றார்.

திருவிடை மருதூர் என்னும் தலத்தை அடைந்து இறைவனை நோக்கி குரல் கொடுத்த போது இறைவன் தலையைச் சிறிது சாய்த்து கருவூரார் குரலைக் கேட்டு பதில் கொடுத்தார். திருவிடை மருதூரில் இன்றும் சிறிது தலை சாய்ந்த நிலையிலேயே இறைவன் திருவடிவம் காணப்படுகிறது.

தஞ்சையில் கோவில் கும்பாபிசேகம் தடைபட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றார். எளிதாக அட்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிட்டையும் கும்பாவிசேகமும் செய்து வைத்தார்.

மன்னன் கொண்டாடினான். மக்கள் மகிழ்ந்தார். இறைவனும் மனங்களித்தார்.

தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூர் சித்தரை, அபரங்சி என்ற தாசி சந்தித்தாள். அவரை முறைப்படி வணங்கி, ஞான சாதனையில் தனக்குள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டினாள். அவள் ஆர்வத்தைப் பாராட்டி தீர்த்து வைத்தார்.

மறுநாள் அரங்கரிடம் சென்று அபரஞ்சிக்கு பரிசளிக்க நவரத்ன மாலையொன்றை வாங்கி அதை அவளிடம் தந்தார். கருவூரார் விடைபெறுகையில் அபரஞ்சி வருந்தினாள். “நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன்” என்று கூறி தன் யாத்திரையைத் தொடங்கினார்.

மறுநாள் காலை திருவரங்கன் மேனியில் இருந்த நவரத்ன மாலை காணாமல் போன செய்தி தெரிந்தது. அதே சமயம் திருவரங்கக் கோவிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அம்மாலை இருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

பஞ்சாயத்து தொடங்கியது. “பெருமானின் நகை உன்னிடம் எப்படி வந்தது” என்று அனைவரும் கேட்டனர். அபரஞ்சியும் “இந்த பள்ளி கொண்ட பெருமானின் சார்பாக கருவூரார் கொடுத்த பரிசு இது” என்று அமைதியாக பதிலளித்தாள். கோயிலதிகாரி திடுக்கிட்டார். “கருவூரார் எங்கே?” என்று கேட்டார்.

அபரஞ்சிதா மனதார கருவூராரை நினைத்தவுடன் அவர் தோன்றினார். “இந்த பிரச்சினைக்கு அரங்கனே பதில் சொல்வான்” என்றார். அது சமயம் எல்லோரும் கேட்கும் வண்ணம், “நீங்கள் எல்லோரும் எனக்கு அலங்காரம் செய்து பார்க்க நினைக்கிறீர்கள். நானோ என் அடியார்களை அலங்காரம் செய்து பார்க்க நினைத்தேன். நான் தான் அபரஞ்சிதாவுக்கு நவரத்ன மாலையை கருவூரார் மூலம் அளித்தேன்”, என்று அரங்கர் அசரீரி மூலம் சொன்னார்.

உண்மையை அறிந்த ஊரார்கள் கருவூராரிடமும் அபரஞ்சியிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.

அரசரிடமும் ஊராரிடமும் செல்வாக்கு அதிகரிப்பதைக் கண்ட அவ்வூர் அந்தணர்கள் பொறாமை கொண்டனர். அவரை வம்பில் இழுத்துவிட நினைத்து மதுவையும், மாமிசத்தையும் அவர் இல்லத்தில் மறைத்து வைத்தனர். அரசரிடம் சென்று கருவூராரின் இல்லத்தில் மது மாமிசம் இருப்பதாக கூறினர்.

அரசரின் ஆணைப்படி கருவூராரின் வீடு சோதனைக்குள்ளானது. ஆயினும் அங்கே பூசைக்கு உண்டான பொருட்களும் யாகத்திற்கு தேவையான பொருட்களும் இருப்பதைக் கண்ட மன்னர் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார். தன்னை முட்டாளாக்கிய வேதியர்கள் மீது கடும் கோபம் கொண்டான். கருவூரார் அவரைச் சமாதானப்படுத்தினார்.

அவமானம் அடைந்த வேதியர்களுக்கு கருவூராரின் மீது கடும் சினம் ஏற்பட்டது. வேதியர்கள் ஒன்று கூடி அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் துரத்தினர். வேதியர்கள் நோக்கத்தினைப் புரிந்து கொண்ட கருவூரார் அவர்களுக்கு பயந்து ஓடுவதைப் போன்று திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார்.

கோவிலுக்குள் ஓடிய கருவூரார், “ ஆனிலையப்பா, பசுபதீசுவரா!” என்று கூறியழைத்து கருவறையிலிருந்த சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊறுதல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்து மறைந்தார்.

கருவூராரைத் துரத்தி வந்தவர்கள் இந்த தெய்வீகக் காட்சியைக் கண்டார்கள். தங்கள் தவறுக்கு வருந்தி பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் ஒரு தனி சந்நிதி அமைத்து அதில் கருவூராரின் வடிவத்தினை அமைத்து வழிபட்டனர். தஞ்சை பெரிய கோவிலிலும் அவரது சிலை பிரதிட்டை செய்யப்பட்டது.

கருவூரார் செய்த நூல்கள்:

கருவூரார் வாத காவியம் – 700
கருவூரார் வைத்தியம் – 500
கருவூரார் யோக ஞானம் – 500
கருவூரார் பலதிட்டு – 300
கருவூரார் குரு நரல் சூத்திரம் – 105
கருவூரார் பூரண ஞானம் – 100
கருவூரார் மெய் சுருக்கம் – 52
கருவூரார் சிவஞானபோதம் – 42
கருவூரார் கட்ப விதி – 39
கருவூரார் மூப்பு சூத்திரம் – 30
கருவூரார் அட்டமாசித்து (மாந்திரிகம்). - ஆகியவைகள் ஆகும்.

தியானச் செய்யுள்:
கருவூரில் அவதரித்த மஹாஸ்தபஸ்யே !
திருக்கலைத் தேரில் முடிதரித்த நவநிதியே!
வாரி வழங்கி அருள் கொடுத்தாய்!
மாறாத சித்துடையாய்!
கல் உள்ளளவும் மண் உள்ளளவும் – உன்
கருணைக் கரங்களே காப்பு!

கருவூரார் சித்தர் பூசை முறைகள்:

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் கருவூரார் சித்தர் படத்தை வைத்து அதன் முன் மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பின்னர் துளசி, மல்லிகைப் பூ ஆகியவற்றைக் கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்:
1. சிவனே போற்றி!
2. சிவனைப் பூசிப்பவரே போற்றி!
3. நாடி யோகியே போற்றி!
4. ஒளி பொருந்தியவரே போற்றி!
5. அவதார புருசரே போற்றி!
6. இந்திராதி தேவர்களுக்கு பிரியரே போற்றி!
7. லோக சேம சித்தரே போற்றி!
8. நடராசரைப் பிரதிட்டை செய்தவரே போற்றி!
9. யோக மூர்த்தியே போற்றி!
10. ஓம் கம் நம் பீஜாட்சரத்தை உடையவரே போற்றி!
11. கற்பூரப் பிரியரே போற்றி!
12. வேண்டிய வரம் அளிப்பவரே போற்றி!
13. வெட்டை வெளியில் வசிப்பவரே போற்றி!
14. பூவுலகில் சஞ்சரிப்பவரே போற்றி!
15. கருவைக் காப்பவரே போற்றி!
16. ஞானத்தை அளிக்கும் கருவூர் சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு நிவேதனமாக பச்சைக் கற்பூரம் போட்ட சர்க்கரைப் பொங்கலை வைக்க வேண்டும்.

பின் உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.

கருவூர் சித்தரின் பூசை பலன்கள்:

இவர் நவக்கிரகங்களில் சனீஸ்வர பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்,

1. ஜாதகத்தில் உள்ள சனி தோசம் நீங்கி நன்மை கிடைக்கும்.
2. ஏழரைச் சனி, அட்டமச் சனி, கண்டச் சனியால் ஏற்படும் கோளாறுகள் அகலும்.
3. வாகனத்தால் ஏற்படக்கூடிய விபத்துகள் நீங்கும்.
4. இரும்பு விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.
5. போக்குவரத்து துறையில் உள்ளவர்களுக்கு உண்டான பிரச்சினகள் அகலும்.
6. படிப்பில் உள்ள மந்த நிலை மாறும்.
7. எதிலும் வெற்றி கிடைக்காமல் தடை ஏற்படக்கூடிய நிலை மாறும்.
8. எலும்பு சம்பந்தமான கோளாறுகள் அகலும்.
9. பிரம்மஹத்தி தோசம் அகலும்.
10 புத்திர பாக்கியம் கிடைக்கும்.
11. வேலையாட்கள் முதலாளிகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகள் அகலும்.

இவரை வழிபட சிறந்த கிழமை: சனிக்கிழமை. இவருக்கு கருநீல வஸ்திரம் அணிவித்து வழிபடுதல் விசேடம்.

கருவூர் சித்தர் வரலாறு முற்றிற்று.

சித்தர்களின் வாழ்க்கை அட்டவணை:

எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.

1. பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.
2. அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.
3. கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.
4. திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் – சிதம்பரம்.
5. குதம்பையார் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.
6. கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.
7. தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.
8. சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.
9. கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருமலை.
10. சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.
11. வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.
12. ராமதேவர் – மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.
13. நந்தீசுவரர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.
14. இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.
15. மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.
16. கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்.
17. போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – ஆவினன்குடி.
18. பாம்பாட்டி – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.
--------------
ref : http://sripambattisiddhar.com/siddhars/index.htm
----------

2. நவநாத சித்த தரிசனம் கண்ட போகர்


     அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.
      போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது.
போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.
அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு – 1700
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20
இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.
இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.
“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.

போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது. அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.

போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.

சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.

பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.

“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.

அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.

போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.

போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.

அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.

அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.

தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.

போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.

தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.

பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.

இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுர கிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.

தியானச்செய்யுள்

சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு;
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே;
சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே;
நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க…

மகா போகர் சித்தர் பூசை முறைகள்:

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ மகா போகர் சித்தர் படத்தை வைத்து அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பட பட்டிருக்கும் தியானச் செய்யுளைக் கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி புஷ்பம், சாமந்திப்பூ, அல்லது சம்பங்கிப்பூ, கதிர்பச்சை கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி!
2. சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி!
3. மகா முனிவர்களால் பூஜிக்கப்படுவரே போற்றி!
4. ப்ரணவ ள்வரூபமாக இருப்பவரே போற்றி!
5. மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி!
6. மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி!
7. மூலிகை, புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி!
8. ஆம், ஊம் என்ற பீஜக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி!
9. பசும்பால் பிரியரே போற்றி!
10. நவபாஷாணம் அறிந்தவரே போற்றி!
11. ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
12. நாக தேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
13. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
14. கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
15. சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
16. முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி! போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றிகளிஅயும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை செபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.
ஸ்ரீ போகரின் பூசை முறைகள்

இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் நிலத்தகராறும், சகோதர சகோதரிகளுக்குள் உட்பூசல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீ மகா போகர் பழனி தண்டாயுதபாணியை நவ பாஷானத்தால் உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்கண்ட பலன்கள் கிடைக்கும்.

1. நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் இவற்றின் பிரச்சினைகள் தீர்ந்து வெற்றி கிடைக்கும்.
2. சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும்.
3. அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும்.
4. கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
5. செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
6. பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
7. அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
8. இவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து அவருக்கு செவ்வரளி புஷ்பங்களால் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

போகர் வரலாறு முற்றிற்று.

1. திருமூலர்

சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.

செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.

பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.

அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.

பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.
மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார். அகத்தியர், 12 காண்டத்தில் திருமூலர் இயற்றியதாக பின்வரும் சில நூல்கள் பட்டியலிடப்படுகிறது.

1. திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
2. திருமூலர் சிற்ப நூல் – 1000
3. திருமூலர் சோதிடம் – 300
4. திருமூலர் மாந்திரிகம் – 600
5. திருமூலர் சல்லியம் – 1000
6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
10. திருமூலர் பெருங்காவியம் – 1500
11. திருமூலர் தீட்சை விதி – 100
12. திருமூலர் கோர்வை விதி – 16
13. திருமூலர் தீட்சை விதி – 8
14. திருமூலர் தீட்சை விதி – 18
15. திருமூலர் யோக ஞானம் – 16
16. திருமூலர் விதி நூல் – 24
17. திருமூலர் ஆறாதாரம் – 64
18. திருமூலர் பச்சை நூல் – 24
19. திருமூலர் பெருநூல் – 3000
போன்றவைகள் திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

திருமூலர் வரலாறு நிறைவுற்றது.

சித்தர்கள் வரலாறு

காலத்தை வென்று மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், ரசவாதத்தினால் இரும்பைப் பொன்னாக்கியும், கூடு விட்டு கூடு பாய்ந்தும், மூச்சடக்கி மனித விமானங்களாக வானத்தில் பறந்தும், நவக்கிரகங்களை வசப்படுத்தியும் பலவாராக சாதனைகளைப் புரிந்த சித்தர்கள் தமிழ் மற்றும் இந்திய மண்ணின் பொக்கிஷங்களாகப் போற்றப் பட வேண்டியவர்கள்.

இவர்கள் இயற்கையோடு இயைந்து அதனைக் கருவியாகப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். வெறும் சித்து விளையாட்டுகளோடு நிற்காமல், யோகம், ஞானம், வைத்தியம் போன்ற பல அரிய விஷயங்களை உலக நன்மைக்காக அருளிச் செய்திருக்கிறார்கள்.

சித்தர்கள் பற்றி அறியத் துடிக்கும் நல் இதயங்களுக்கு என்னால் இயன்றவரை சில புத்தகங்களின் மூலம் சேர்த்து வைத்ததை இந்தப் பதிவுகளில் 18 சித்தர்களின் வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள், அவர்களை பூஜிக்கும் முறை, பூஜா பலன்கள் ஆகியவைகளை வரும் பதிவுகளில் பதிந்துள்ளேன்.

நன்றி. – கவிப்ரியன்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்-12



மனிதர்களுக்கு உறவுகள் வழியே சிக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? அவர்கள் தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள உறவுகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, வாழ்க்கையிலிருக்கும் இடைவெளிகளை நிரப்புவதற்கே உறவுகளைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வீதிமுனைகளில் நின்று கவனிப்பீர்களேயானால் நிமிடத்திற்கு நூற்றுக் கணக்கானவர்கள் உங்களை கடந்து செல்வார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாடிய முகங்களுடந்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னாயிற்று? இத்தனைக்கும் உங்கள் முன்னோர்களைக் காட்டிலும் ஆடம்பரமான வாழ்க்கையத்தான் வாழ்கிறீர்கள்.

இந்தியாவில் மட்டுமல்ல; ஒருமுறை பிரான்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேசுகிறபோது கூட இதே கேள்வியைத்தான் கேட்டேன். ‘முப்பது வயதைக் கடந்தவர்களெல்லாம் தொங்கிய முகத்துடன் திரிந்து கொண்டிருக்கிறார்களே ஏன்?’ என்று கேட்டேன். ஒரு பெண் எழுந்து பதில் சொன்னாள் – “அவர்களுக்கெல்லாம் திருமணமாகி இருக்கும்’ என்று.

மனிதர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ளத் திருமணம் செய்து கொள்வார்களேயானால், அது மிகவும் நல்ல விஷயம். மாறாக, தங்கள் துயரங்களைப் பெருக்கிக்கொள்ள திருமணம் செய்துகொள்வது மிகவும் மோசமான சூழ்நிலை. உறவுகள் என்பவை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளாக விளங்கும்வரை சிக்கல் இல்லை. பிறரிடம் இருந்து எதையாவது பிடுங்கிக் கொள்வது என்பதாக இருக்கும் என்றால் எப்போதும் சிக்கல்தான். அந்தச் சூழலை நீங்கள் எவ்வளவுதான் திறன்பட நிர்வகித்தாலும் தொல்லைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் எம்.பி.ஏ. படித்திருக்கலாம். தொழிலில் பெரிய நிர்வாகியாக விளங்கலாம். ஆனால் உங்கள் உறவுகளை நிர்வகிக்க அது உதவுவதில்லை. உங்கள் உறவு என்பது பக்கத்திலிருக்கும் மனிதருக்கான ஓர் அர்ப்பணிப்பாக விளங்கும் என்றால் அது மிகவும் அற்புதமாக இருக்கும்.

உலகியல் சார்ந்த தேவைகளைப் பொறுத்த வரையில் அனைவருமே ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால் உங்கள் அனுபவத்தின் தன்மையைப் பொறுத்தவரை நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் அனுபவம் உங்கள் அளவில் முழுமையானதாக இருக்கலாம். உலகமே துன்பமயமாக இருந்தாலும், உள்நிலை அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கிற வாய்ப்பு சூழலுக்கு அடிமையாக்கப்பட்டோ, அடகு வைக்கப்பட்டோ இருந்தால் தான் அது சாத்தியமில்லை. 1940-களில் நீங்கள் ஒரு கார் வாங்கினால் கூடவே நீங்கள் இரண்டு வேலைக்காரர்களை நியமிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தள்ளி விட்டால்தான் கார் கிளம்பும். 1950-களில் வந்த கார்களுக்கு ஒரு வேலைக்காரர் போதும். அவர் முடுக்கி விட்டாலே கார் கிளம்பும். இப்போது வருகிற கார்களெல்லாம் விசையைப் பொருத்தியதும் தாமாகவே கிளம்புகின்றன. உங்கள் மகிழ்ச்சி என்கிற வாகனத்திற்கோ யாராவது வந்து தள்ளிவிட வேண்டிய தேவை இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சியைத் தானியங்கியாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், தள்ளிவிட யாருமில்லாத போது நீங்கள் தவித்துப் போவீர்கள்.

உங்கள் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உங்களைச் சார்ந்தே இருக்கும்போது உங்களைச் சுற்றியிருப்பவ்ர்களுடன் அருமையான உறவுகளை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கையைப் பார்த்தே சொல்லுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா? அல்லது எப்போதும் சோகமாக இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா?

மகிழ்ச்சியாக இருப்பவர்களோடுதான் வாழ விரும்புவீர்கள். மறந்து விடாதீர்கள்! அனைவருமே அதைத்தான் விரும்புகிறார்கள். நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருந்தால் எல்லோரும் உங்களோடு உறவு கொள்ளத்தான் விரும்புவார்கள். யாரிடமிருந்தாவது எதையாவது கசக்கிப் பிழிய வேண்டும் என்று நீங்கள் கருதினால், நேற்று உங்களை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவர்கள்கூட இன்று உங்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள்.

எனவே, உங்களை முதலில் மகிழ்ச்சியாக வைக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்-11




நீங்கள் ஒரு குழந்தையாய் இருந்தபோது அமைதியும் ஆனந்தமும் உங்கள் இயல்பாகவே இருந்தது. எப்போதும் ஆனந்தமாகவே இருப்பீர்கள். எப்போதாவது, யாரவது உங்கள் ஆனந்தத்தைக் கெடுப்பார்கள். ஆனால் இப்போதைய நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எப்போதும் வருத்தமாகவே இருக்கிறீர்கள். எப்போதாவது யாரவது உங்களை ஆனந்தப் படுத்த வேண்டி இருக்கிறது.

உங்கள் அமைதி முற்றாகத் தொலைந்து போய்விட்டால் என்ன செய்கிறீர்கள்? வீட்டிற்குப் போய் எல்லாரையும் சத்தம் போடுகிறீர்கள். உங்கள் கணவரையோ, மனைவியையோ, குழந்தையையோ கோபித்துக் கொள்கிறீர்கள். உங்கள் அமைதியின்மைக்கு முதல் பலி அவர்கள் தான்.

அடுத்த நாளும் உங்கள் அமைதியின்மை தொடருமேயானால் உங்கள் அண்டை வீட்டுக்காரரிடம் சண்டை போடுகிறீர்கள். இதே மனநிலை தொடர்ந்தால் சக பணியாளர்களிடம் சத்தம் போடுகிறீர்கள். அமைதியின்மை அப்படியே தொடர்ந்தால் உங்கள் முதலாளியிடமே சத்தம் போடுகிறீர்கள்.

நீங்கள் முதலாளியிடம் சத்தம் போட்டதுமே உங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதைச் சுற்றி இருப்பவர்கள் புரிந்து கொள்கிறார்கள். சிகிச்சைக்கு உங்களை அழத்துச் செல்கிறார்கள். மனநல மருத்துவர் உங்களிடம் பேச்சுக் கொடுத்து உங்களை அமைதிப் படுத்தப் பார்க்கிறார். அதுவும் முடியாத போது, உங்களுக்கு ஒரு மாத்திரை கொடுக்கிறார். ஒரு சிறு மாத்திரைதான். அதை விழுங்கிய மாத்திரத்தில், அதுவரை பதட்டத்தில் இருந்த உங்கள் உடலும் மனமும் அமைதியாகிவிடுகிறது. அது தற்காலிகமானது தான் என்றாலும், உங்களுக்கு உடனே அமைதி ஏற்படுகிறது. அந்த மாத்திரையில் இருப்பதென்ன? ஒரு சில ரசாயனங்கள் தான். அவை உங்களுக்குள் சென்று உங்களை அமைதிப்படுத்துகின்றன. இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், அமைதி என்பதே ஒருவிதமான ரசாயனம் தான். ஆனந்தம் என்பதும் ஒரு ரசாயனம்தான். பதட்டம் என்பதும் ஒரு ரசாயனம் தான். ஒவ்வொரு மனித அனுபவமுமே அவ்வப்போது உங்களுக்குள் ஏற்படுகிற ரசாயன மாற்றங்களின் வெளிப்பாடுகள்தான்.

எனவே, யோகா என்னும் எளிய முறையின் வழியாக உங்களுக்குள் அமைதியும், ஆனந்தமும் இயல்பாகவே ஏற்படுவதற்கான ரசாயனத்தை உங்களுக்குள் உருவாக்க முடியும். குழந்தையாக இருந்த போது அந்த ரசாயனம் உங்களுக்குள் இருந்தது. வாழ்க்கையின் அடிப்படை புரியாமல் அனைத்தையும் குழப்பிக் கொண்டதால், உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறீர்கள். சிலரைக் கொந்தளிக்கச் செய்ய யாராவது தூண்டிவிட வேண்டும். சிலரைக் கொந்தளிக்கச் செய்ய சில எளிய காரணங்களே போதும். அந்த அளவிற்குக் கொந்தளிப்பில் நிபுணராகி விட்டீர்கள். காரணமே இல்லாமல் கோபப்பட அவர்களால் முடியும்.

எனவே, உங்களுக்குள் ஒரு ரசாயன மாற்றத்தினை இயல்பாகவே ஏற்படுத்தக் கூடிய விஞ்ஞானத்திற்கு யோகா என்று பெயர். யோகா என்றதுமே விசித்திரமான கோணங்களில் உங்கள் உடலை வளைத்துக் கொள்வதென்று கருதி விடாதீர்கள். யோகா என்பது உங்களுக்குள் அந்த மாற்றத்தை நீங்களாக விரும்பி ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம். புறநிலையில் நீங்கள் எதையுமே செய்ய வேண்டியதில்லை. உள்நிலையில் ஏற்படுகிற மாற்றம் அது.

ஒரு மனிதன் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதைத் தன்னுடைய இயல்பாகவே கொண்டால், அவனது வாழ்க்கை ஆனந்தத்தைத் தேடுவதாக இருக்காது. ஆனந்தத்தின் வெளிப்பாடாகவே இருக்கும்.

இன்று மனிதன் தன் சுயநலத்திற்காக உலகைச் சிதைக்கத் தொடங்கியிருக்கிறான். ஒவ்வொரு தாவரமும், புழுவும், பூச்சியும், பறவையும், விலங்கும், பூக்களும், மனிதனின் மகிழ்ச்சிக்காக சித்திரவதைக்கு ஆளாகின்றன. தன் மகிழ்ச்சிக்கு விலையாக இந்தப் பிரபஞ்சத்தையே தந்தும் கூட மனிதன் மகிழ்ச்சியை உணரவில்லை. அமைதியை உணரவில்லை. நல்ல வேளையாக உலக மக்கள் தொகையில் 50 சதவிகிதம் சோம்பேறிகள். இல்லையென்றால், அவர்களும் சுயநலத்தோடு செயல்கள் புரிந்து இந்த உலகத்தை மேலும் சிதைத்திருப்பார்கள். இன்றைய உலகத்தைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது மந்தனின் செயல்கள் அல்ல; மனிதனின் சோம்பேறித்தனம் தான். மனிதனுடைய அறிவும், அன்பும், பரிவும் அல்லவா இந்த உலகத்தைக் காப்பாற்ற வேண்டும்?

எனவே, இதற்கான பரிமாணத்தை நாம் உணரத் தொடங்கினால், வெளியே உங்களைச் சுற்றி நடைபெறுகிற சம்பவங்களைச் சார்ந்திராமல் அமைதியானவராகவும் ஆனந்தமானவராகவும் நீங்களே வாழ்வதற்குரிய வழி யோகா என்பது புரியும். வெளியுலகம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பில்லை. எவ்வளவுதான் அறிவியலும் தொழில் நுட்பமும் முன்னேறினாலும் கூட வெளிச்சூழல் முழுக்க முழுக்க உங்களுக்கு விருப்பமான விதங்களில் அமையப் போவதில்லை. நீங்கள் வளர்க்கும் நாய்கூட உங்கள் கட்டளைப்படி முழுமையாக நடப்பதில்லை. குறைந்த்து உங்கள் உள் தன்மையாவது நீங்கள் விரும்புகிற விதமாய் அமைய வேண்டுமில்லையா? எனவே உங்களையாவது நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

அன்பாகவும், அமைதியாகவும் இருப்பதுதான் உங்கள் இயல்பு. ஏனெனில், உங்கள் உள்நிலை ரசாயனம் இயற்கையாகவே அப்படித்தான் இருக்கிறது. ஒரு மனிதனின் செயல்திறன் முழுமையாக வெளிப்படுவதென்பதே உள்நிலையில் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்போது தான். எனவே தொழிலில் சிறக்க வேண்டுமென்றாலும், பணியில் சிறக்க வேண்டுமென்றாலும், கல்வியிலோ, அனுபவத்திலோ மேம்பட வேண்டுமென்றாலும், அல்லது குடும்பத்துடன் வாழ வேண்டுமென்றாலும் உள் தன்மையை ஒரு மனிதன் சீர் செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் தனக்கு மட்டுமன்றி, தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அவன் தீமை விளைவித்துக் கொள்கிறான்.

அமைதியில்லாத நிலை உங்களுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் இருப்பதில்லை தான். ஆனால் ஒரு நாளில் ஏற்படுகிற ஐந்து நிமிடப் பதட்டம் கூட உங்கள் வாழ்வைப் பாழ்படுத்தி விடக் கூடும்.. எனவே, வெளியில் என்ன நடக்கிறது என்பதை உங்களால் முடிவு செய்ய முடியாவிட்டாலும், உங்களுக்குள் என்ன நடக்க வேண்டும் என்பதையாவது நீங்களே முடிவு செய்தாக வேண்டும்.

அப்படி முடிவு செய்கிற, நிலைக்கு நீங்கள் வந்துவிட்டால் வெளிச் சூழலில் நிகழ்கிற எதுவும் உங்களைப் பாதிக்காது. ஒன்று கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நீங்கள் விரும்பியது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் நீங்கள் அமைதியாக ஆனந்தமாக வாழ்வீர்கள்.

முழுக்க முழுக்க வெளிச் சூழலைச் சார்ந்தே உங்கள் வாழ்க்கை இருப்பதால்தான் துன்பம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதனால்தான் வாழ்க்கையின் ஒரு பகுதி துன்பம் என்று மக்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். துன்பம் என்பது வாழ்வின் ஒரு பாகமென்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவீர்கள் என்றால் அவர்களுக்கு அதைவிடப் பெரிய அநீதியை நீங்களே இழைக்க முடியாது. அமைதியாக – ஆனந்தமாக வாழக்கூடிய வாய்ப்பு இருப்பதையே அவர்கள் மனங்களிலிருந்து அகற்றியவர்கள் ஆவீர்கள். உங்கள் நோக்கம் நல்லதாக இருந்தால் கூட அவர்களுக்கு உங்களையும் அறியாமல் தீமை செய்கிறீர்கள்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்-10



     உறவுமுறைகள் என்று எடுத்துக்கொண்டால் அவற்றில் எத்தனையோ விதங்கள் உண்டு. ஒரு தனிமனிதருக்கு அவரது வாழ்க்கைத் துணைவர், குழந்தை, சொந்த-பந்தம், பெற்றோர், பக்கத்து வீட்டுக்காரர் என்று தொடங்கி, அவரது நண்பர், அவரது பகைவர் அனைவருமே அவருடைய உறவு வட்டத்திற்குள் வருபவர்கள்தான். இத்தனை உறவிகள் எதற்காக என்ற கேள்வி எழலாம். ஒரு மனிதருக்கிருக்கும் விதவிதமான தேவைகளை நிறைவு செய்வதற்காகவே வித விதமான உறவுகள் உருவாகின்றன. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, சமூகம் சார்ந்து, பொருளாதாரம் சர்ந்து, உலகியல் சார்ந்து மனிதனுக்கு எவ்வளவு தேவைகள் உண்டோ அவ்வளவு உறவுகள் உருவாவது இயற்கை. ஒரு குறிப்பிட்ட உறவுமுறை அதற்குரிய தேவையை நிறைவு செய்யாத பட்சத்தில் அந்த உறவு செயலிழக்கிறது.

      உங்கள் வாழ்வில் விதவிதமான செயல் பாடுகளுக்கேற்ப விதவிதமான உறவுகள் அமைகின்றன. இதில், ஒவ்வொரு நாளும் உங்கள் செயல்களின் தன்மை மாறிக்கொண்டே வருகிறபோது, அந்தச் செயல்களுக்கேற்ப ஏதாவது ஒரு குறிப்பிட்ட உறவிடம் கூடுதல் கவனம் செலுத்துகிறீர்கள். உங்கள் பங்குதாரரிடம் தொலைபேசியில் பேசுகிறீர்கள். அடுத்த நிமிடமே உங்கள் குழந்தையிடம் ஏதோ கேட்கிறீர்கள். அதற்கடுத்த நிமிடமே உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குப் பதில் சொல்கிறீர்கள். ஒவ்வோர் உறவையும் ஒவ்வொருவிதமாகக் கையாள வேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தையைக் கையாள்கிற விதத்தில் உங்கள் கணவரைக் கையாள முடியாது. எனவே, இத்தனை உறவுகளையும் ஒருசேர கையாள்வது என்பது பத்து பந்துகளை ஒரே நேரத்தில் வீசிப்பிடிப்பதைப் போன்றது.

     உங்கள் கைகளில் ஒரேயொரு பந்து இருக்குமென்றாஅல் எளிதாக இருக்கும். ஒரே நேரத்தில் பத்து பந்துகளை வீசிப்பிடிக்க வேண்டும். ஒன்றைக் கூட நழுவ விடக்கூடாது என்றால் அது எவ்வளவு சிரமமானது! ஒரே நேரத்தில் பல உறவுகளைக் கையாளுவது என்பது இப்படித்தான். ஒரு மனிதர் ஒரே நேரத்தில் பத்து பந்துகளை வீசிப் பிடிக்கும்போது அவரால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியாது. நீங்கள் உறவுகளைக் கையாளுகிற சூழலும் இப்படித்தான் இருக்கிறது.

உங்களுடைய சில தேவைகளை நிறைவு செய்வதற்காக உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும், அந்த உறவுகளின் தேவைகளை ஈடுசெய்ய வேண்டிய நிர்பந்தம் உங்களுக்கு இருக்கிறது. இன்னொரு விதமாகவும் வாழலாம். அது எவ்விதமான உறவுகளும் இல்லாமல் வாழ்வது. தனக்குள்ளேயே முழு நிறைவைக் கண்டு வெளியே வேறு உறவுகளைத் தேட வேண்டிய தேவையில்லாமல் இருந்தால் அது வேறு விஷயம். ஆனால், இப்போதைய சூழலில் பிறருடன் நீங்கள் கொண்டிருக்கும் உறவுகள்தான் உங்கள் வாழ்க்கையின் தன்மையையே தீர்மானிக்கின்றன. எனவே, வீட்டிலும் சரி; அலுவலகத்திலும் சரி; வெளியிலும் சரி – மிகவும் மேன்மையான உறவுகளி மேற்கொள்வது எப்படி என்று பார்க்க வேண்டும்.

      உறவுகளின் ஆதாரசுருதியே தேவைகள்தான் என்பதை முதலில் பார்த்தோம். விதம்விதமான உறவுகளை உருவாக்கிக் கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாய் இருக்க முயல்கிறீர்கள். நட்பை உருவாக்கிக் கொள்வது, திருமணம் செய்து கொள்வது, குழந்தை பெற்றுக்கொள்வது, தொழில் தொடங்குவது – இவையெல்லாமே மகிழ்ச்சியாய் இருப்பதற்கான முயற்சிகள் தான். இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால், மனிதர்களைக் கசக்கிப் பிழிந்து மகிழ்ச்சியின் சாறெடுக்க முயல்கிறீர்கள். இதைச் செய்கிற போதுதான் உறவுகள் உங்களுக்குத் தொடர்ந்து தொந்தரவுகளையே தருகின்றன.

     பெரும்பாலான் மனிதர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உறவுகளிலேயே மிகவும் நெருக்கமானது ஆண்-பெண் உறவுகள் தான்.

அவர்கள் சேர்ந்திருக்கும் நேரங்களில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். பிரித்து வைத்தீர்கள் என்று சொன்னால் 24 மணி நேரத்திற்கு மேல் அவர்களால் பிரிந்திருக்க உடியாது. மறுபடியும் சேர்த்து வைத்தால் பத்து நிமிடங்களுக்குள் சண்டையைத் தொடங்கி விடுவார்கள். அவர்களால், சேர்ந்தும் இருக்க முடியாது; பிரிந்தும் இருக்க உடியாது. பிரச்சினையே இதுதான். இது அவர்களுக்குள் இருக்கும் ஒருவித தேவையின் காரணமாக ஏற்படுகிற மோதல்.

     தங்களுக்குள் மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ அவர்கள் உணரவில்லை. ஒருவர் இன்னொருவரிடமிருந்து மகிழ்ச்சியையோ, ஆனந்தத்தையோ பிழிந்தெடுக்கப் பார்க்கிறார்கள். ஆனால், இதுவொரு போராட்டமாகத்தான் இருக்கும். நெருக்கமான உறவுகளில் இருக்கும் இத்தகைய இரண்டு பேர் ஒருவரையொருவர் கொலை செய்துவிடப் போவதில்லை. ஆனால் ஒருவரையொருவர் வெவ்வேறு விதங்களில் சித்திரவதை செய்து கொள்வார்கள். இது ஒரு ஒப்பந்தம். ஏனெனில், இன்னொருவரைக் கொலை செய்துவிட்டால் அவருக்கு வேறு போக்கிடம் இல்லை.

     எனவே, மேன்மையானா உறவுகள் மலர வேண்டுமென்றால், ஒரு மனிதர் உறவு கொள்வதற்காக இன்னொருவரைத் தேடுவதர்க்கு முன் தனக்குள் ஆழமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் ஆனந்தத்திற்கு நீங்களே மூலமாக இருக்கும் போது, உங்கள் உறவுகள் ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழியாக இருக்கும் போது, உறவுகளைக் கசக்கிப் பிழிய வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. எல்லோரோடும் மிக அற்புதமான உறவுகளை உங்களால் மேற்கொள்ள முடியும்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்-9




கடவுள் சிலை என்பது, கடவுளின் உருவம் என்று நினைத்து சிலர் உருவாக்கியிருக்கிற வடிவம். உங்கள் குழந்தையைப் பாருங்கள். அது கைக் குழந்தையாக இருக்கிறபோது தன் தாயுடன் தூங்குகிறது. தாயின் அரவணைப்பின் வசதி அதற்குத் தெரியும். குழந்தை வளர்ந்த பிறகு அதைத் தனியாகப் படுக்க வைப்பதுதான் அதன் வளர்ச்சிக்கு மிக முக்கியம். திடீரென்று தனியாகப் படுக்க வைத்தால் அதற்குச் சிரமம். என்ன செய்வீர்கள்? வழக்கமாக ஒரு பொம்மை கொடுப்பீர்கள் – அதைப் பிடித்துக்கொண்டு தூங்குவதற்காக. இப்போதெல்லாம் பார்பி அல்லது மிக்கி மௌஸ் போன்ற பொம்மைகள் தரப்படுகின்றன.

இந்த பொம்மைகளைக் கட்டி அணைத்துக் கொண்டு தூங்குவது குழந்தைக்கு வசதியாக இருக்கிறது. குழந்தை வளர்கிறபோது பொம்மையை வீசிவிடும்படி நீங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஒருகாலத்தில் நீங்கள் பாதுகாத்த பொம்மையை அதுவே குப்பைத் தொட்டியில் வீசிவிடுகிறது. இதை நீங்கள் சொல்ல வேண்டியதுகூட இல்லை. குழந்தை வளர வளர அதன் வாழ்விலிருந்து பொம்மை அகன்று விடுகிறது. ஆனால் குழந்தைக்குப் பொம்மை தேவைப்பட்டு நீங்கள் அதைப் பிடுங்கிக் கொண்டால் அது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும்; குழந்தையின் மனநிலையைப் பாதிக்கும். அதுபோல இப்போது உங்களுக்கு ஒரு உருவம் தேவைப்படுகிறது. நீங்கள் பற்றிக்கொண்டு நடக்க ஒரு கரம் வேண்டும் என்று தெரிந்திருந்தால் வேறு ஏதும் தேவையில்லை. ஆனால் ‘இதுதான் கடவுள்’ என்று முடிவு செய்துவிட்டால், அதற்குப் பிறகு சிரமம் தான். கடவுளோடு தொடர்பு படுத்த உங்களுக்கு ஒரு உருவம் தேவைப்படுகிறது. அதை உருவாக்குகிறீர்கள். தேவைப்படும்வரை அதைப் பயன்படுத்துங்கள். ஆனால் அதைத் தாண்டி வளர்ந்துவிட்டால் வெளியே வந்துவிடுங்கள்.

இதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் கோவில்கள் வழிபாட்டுக்காக உருவானவை அல்ல. சில காலமாகத்தான் அப்படி ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. கோவில் கட்டுவதே ஆழமான ஒரு விஞ்ஞானம். அதிலிருக்கிற விக்கிரகம், பிரகாரம், கர்ப்பக்கிருகம் எல்லாமே சரியாகக் கட்டப்பட்டிருந்தால் அதுவே ஒரு பெரிய சக்திமிக்க இடம். அடிப்படையில் சில விஷயங்கள் உள்ளன. விக்கிரகத்தின் அளவ்ர், விக்கிரகத்தின் வடிவம், விக்கிரகம் வைத்திருக்கும் முத்திரை, அதன் பிரதிஷ்டைக்கு பயன்படுத்துகின்ற மந்திரம், இவை எல்லாம் சரியாக அமையுமேயானால் அது சக்திமிக்க இடமாகிவிடும். இந்த முறையில் கோவில் நல்ல அதிர்வலைகளோடு உருவாக்கப்பட்டிருக்கும். நல்ல அதிர்வலைக்காக உருவாக்கப்பட்ட ஒரு கருவி கோவில் என்று சொல்கிறபோது புராதனக் கோவில்களைச் சொல்கிறேன். நவீன காலத்தில் கட்டப்படுகிற கோவில்கள் வணிக மையம் போல் கட்டப்படுகின்றன. ஏறக்குறைய நோக்கமும் அதுவாகத்தான் இருக்கிறது. வணிக மையம் பிற தேவைகளை நிறைவு செய்வதைப் போல கடவுள்களை வைத்துக் கொண்டு கோவில்களும் அதனைச் செய்கின்றன.

புராதனமான கோவில்கள் ஆன்மிக விஞ்ஞான அடிப்படையில் உருவானவை. உங்கள் பாரம்பரியத்தில் கோவில்களுக்குப் போனால் நீங்கள் கும்பிட வேண்டாம். பூசாரிக்குப் பணம் தர வேண்டாம். எதையாவது கேட்க வேண்டும் என்றெல்லாம் யாருமே சொல்லித் தரவில்லை. இவையெல்லாம் பாரம்பரியத்தின் ஒரு பகுதியல்ல. இவை இப்போது நீங்கள் தொடங்கியிருப்பது. உங்களைக் கோவிலுக்குச் சென்று அமைதியாக அமர்ந்து எழுந்து வரச் சொன்னார்கள். அதுதான் பாரம்பரியம். சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும். இப்போதெல்லாம் போகிறீர்கள், உட்காருவதுபோல பாவனை செய்துவிட்டு உடனே எழுந்து வந்து விடுகிறீர்கள். இதுவல்ல ஆலயம் சென்று வரும் முறை. நீங்கள் அங்கே ஏன் அமரவேண்டும் என்றால், அங்கே ஒரு நல்ல சக்தி இருக்கிறது. காலையில் உங்கள் உலகியல் வாழ்க்கைக்குள் நுழையும் முன் கோவிலுக்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்துவிட்டுப் போகும் முறை இருந்தது. இது நேர்மறை அதிர்வுகள் மூலம் உங்களை மறுசீரமைத்துக் கொள்கிற முறை. ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தோடு உலக வாழ்க்கைக்குள் போவீர்கள். ஆன்மிகப் பாதையில் யார் இல்லையோ, அவர்களுக்குத்தான் பழங்காலத்தில் கோவில்கள் தேவைப்பட்டன.

ஒரு மனிதர் தனக்கென்று சில ஆன்மிகப் பாதைகளைத் தொடங்கிவிட்டால், தினமும் கோவிலுக்குப் போக வேண்டியதில்லையென்று பாரம்பரியத்தில் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது. வேறுவிதமாகச் சொல்ல வேண்டும் என்றால், கோவில்கள் என்பவை பேட்டரியை சார்ஜ் செய்கிற இடம் போல. உங்களை நீங்களே சார்ஜ் செய்து கொள்கிற ஒரு முறையிருந்தால், கோவிலுக்குப் போக வேண்டியதில்லை. இது கடவுளின் இருப்பிடமாகவோ, பிரார்த்தனை செய்கிற இடமாகவோ இல்லை. முன்பெல்லாம் பிரார்த்தனை அனுமதிக்கப் பட்டதுகூட இல்லை. பலர் பயன்படுத்தும் வண்ணம் சக்தியின் இருப்பிடமாகத் திகழ்ந்தது. அப்போதெல்லாம் கோவில் கட்ட எல்லோரும் பணம் கொடுத்தார்கள். ஏனெனில், எல்லோரும் கோவிலைப் பயன்படுத்திக் கொள்ளலாமென்று. ஆனால் உங்களுக்குத் தகவல் அனுப்புவதற்கான இடமாகக் கோவில் இருந்ததில்லை. உங்கள் பேராசையை நிறைவு செய்து கொள்வதற்கான் இடமாகவும் கோவில்கள் இருந்ததில்லை. இப்போதெல்லாம் கோவில்கள் அப்படிப் பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது.